புதுமனை புகு விழாவில் பரிதாபம்: மின்சாரம் தாக்கி வாலிபர் பலி

பூதப்பாண்டி அருகே புதுமனை புகு விழாவில் மின்சாரம் தாக்கி வாலிபர் பரிதாபமாக இறந்தார். இந்த சோகமான சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-

Update: 2019-05-09 22:00 GMT
பூதப்பாண்டி,

பூதப்பாண்டி அருகே உள்ள நந்திக்குழி பகுதியை சேர்ந்தவர் இம்மானுவேல், கூலி தொழிலாளி. இவருடைய மனைவி பிளாரன்ஸ். இவர்களுக்கு கபின்பாபு (வயது 19) என்ற மகனும், ஒரு மகளும் இருந்தனர்.

கபின்பாபு ஐ.டி.ஐ. முடித்துவிட்டு வேலை தேடி வந்தார். படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்காததால் கட்டிட வேலைக்கு சென்று வந்தார். இவர்கள் அந்த பகுதியில் புதிதாக வீடு கட்டினர். வீட்டின் புதுமனை புகுவிழா நேற்று நடந்தது. இதையொட்டி நேற்று காலையில் உறவினர்கள், நண்பர்களால் வீடு நிரம்பி வழிந்து கொண்டிருந்தது.

கபின்பாபு ஓடியாடி வேலைகளை கவனித்து கொண்டிருந்தார். அவர் பிரார்த்தனை நிகழ்ச்சிக்காக மைக்கை சரி செய்ய முயன்றார். அப்போது எதிர்பாராத விதமாக கபின்பாபு மீது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார். அசைவற்று மயங்கிய நிலையில் கிடந்த அவரை உறவினர்கள் மீட்டு பூதப்பாண்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து பூதப்பாண்டி போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார், பிணத்தை கைப்பற்றி ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அவரது உடலை பார்த்து பெற்றோரும், உறவினர்களும் கதறி அழுதனர்.

மேலும் இதுதொடர்பாக பூதப்பாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். புதுமனை புகுவிழாவில் மின்சாரம் தாக்கி வாலிபர் பலியான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

மேலும் செய்திகள்