மயிலம் அருகே நள்ளிரவில் பரபரப்பு, வீடு புகுந்து பெண்ணை தாக்கி 5½ பவுன் நகை பறிப்பு - 2 வாலிபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

மயிலம் அருகே நள்ளிரவில் வீடு புகுந்து பெண்ணை தாக்கி 5½ பவுன் நகையை பறித்துச்சென்ற 2 வாலிபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2019-05-11 22:30 GMT
மயிலம்,

சென்னை மதுரவாயலை சேர்ந்தவர் செல்வம்(வயது 37). கார் டிரைவர். இவருடைய மனைவி வாசுகி(35). இவர், மயிலம் அருகே கள்ளக்கொளத்தூரில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு நேற்று முன்தினம் காலை வந்தார். இரவில் வாசுகி, தனது தாய் ஜெயலட்சுமியுடன் வீட்டில் படுத்து தூங்கினார். அப்போது அவர்கள் காற்றுக்காக கதவை திறந்து வைத்திருந்தனர்.

நள்ளிரவு 1 மணி அளவில் 25 வயது மதிக்கத்தக்க 2 வாலிபர்கள், ஜெயலட்சுமியின் வீட்டுக்குள் புகுந்தனர். அங்கு அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்த வாசுகி கழுத்தில் அணிந்திருந்த 5½ பவுன் நகையை 2 வாலிபர்களும் பறித்தனர். உடனே திடுக்கிட்டு எழுந்த அவர், திருடன்... திருடன்... என்று கூச்சலிட்டார்.

இதனால் ஆத்திரம் அடைந்த 2 வாலிபர்களும், வாசுகியை சரமாரியாக தாக்கினர். இதில் அவர் நிலைகுலைந்து கீழே விழுந்தார். பின்னர் 2 பேரும் 5½ பவுன் நகையை பறித்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இது குறித்து மயிலம் போலீஸ் நிலையத்தில் வாசுகி புகார் கொடுத்தார்.

அதன் பேரில் இன்ஸ்பெக்டர் ரமேஷ்பாபு, சப்-இன்ஸ்பெக்டர் விவேகானந்தன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து 2 வாலிபர்களையும் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்