திருமணமான ஒரு மாதத்தில் புதுமண தம்பதி தற்கொலை முயற்சி போலீசார் விசாரணை

திருமணமான ஒரு மாதத்தில் புதுமண தம்பதி தற்கொலைக்கு முயன்றனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2019-05-11 21:45 GMT
காவேரிப்பட்டணம்,

கிருஷ்ணகிரி மாவட்டம் பாரூர் அருகே உள்ள கீழ்குப்பம் மேட்டுகொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 27). இவர் ஓசூர் அருகே உள்ள ஒரு கோழிப்பண்ணையில் மேற்பார்வையாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் அதே பண்ணையில் வேலை செய்யும் வட மாநிலத்தைச் சேர்ந்த தலிகா (24) என்ற பெண்ணை கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு செந்தில்குமார், தலிகா ஆகியோர் சொந்த ஊரான மேட்டுகொட்டாய்க்கு வந்தனர். நேற்று முன்தினம் மாலை 2 பேரும் விஷம் குடித்த நிலையில் வீட்டில் மயங்கி கிடந்தனர். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து பாரூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் ஆஸ்பத்திரிக்கு சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள். காதல் திருமணம் செய்த ஒரு மாதத்தில் புதுமண தம்பதி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்