மதுரை விமான நிலையத்தில் ரூ.3½ லட்சம் தங்கம் பறிமுதல் அரியலூர் வாலிபர் சிக்கினார்

மதுரை விமான நிலையத்தில் ரூ.3½ லட்சம் தங்கம் கடத்தி வந்த அரியலூரை சேர்ந்த வாலிபர் சிக்கினார்.

Update: 2019-05-11 22:45 GMT

மதுரை,

துபாயில் இருந்து மதுரை வரும் விமானத்தில் தங்கம் கடத்தி வருவதாக சுங்கப்புலனாய்வு துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து மதுரை விமான நிலையத்திற்கு வந்த பயணிகளை சுங்க புலனாய்வு துறை உதவி கமி‌ஷனர் வெங்கடேஷ்பாபு தலைமையிலான அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அப்போது அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த தமிழரசன் மகன் பழனிசாமி (வயது 32) என்பவரது நடவடிக்கையில் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அதன்பேரில், அவர் கொண்டு வந்த பையை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது அதில், ஜவுளி பொருட்கள் இருந்தன. மேலும் அதில் வைத்திருந்த கருப்பு நிற உடையில் அலுமினிய முலாம் பூசப்பட்ட பாசிமணிகள் இருந்தது தெரியவந்தது.

அதிகாரிகள் அந்த உடையை சோதனை செய்து பார்த்தபோது, அதில் தங்கம் கலந்திருப்பது தெரியவந்தது. இதனைதொடர்ந்து அதிகாரிகள் அதில் இருந்த ரூ.3 லட்சத்து 71 ஆயிரத்து 548 மதிப்பிலான 116 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர். பிடிபட்ட வாலிபரிடம் அதிகாரிகள் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

இதுகுறித்து, சுங்கப்புலனாய்வு துறை உதவி கமி‌ஷனர் வெங்கடேஷ்பாபு கூறும்போது, “பழனிசாமியின் உடைமையை சோதனை செய்தபோது அதில் கருப்பு நிற ‘பர்தா‘ இருந்தது தெரியவந்தது. பழனிசாமிக்கும், பர்தாவிற்கு என்ன சம்பந்தம் என்பது குறித்து அவரிடம் விசாரித்தோம். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணமாக பதிலளித்தார். அதன்பின்னர், அந்த உடையை தனியாக எடுத்து சோதனை செய்தோம். அப்போது அதில் 145 எண்ணிக்கை கொண்ட தங்க பாசி மணிகள் கடத்தி கொண்டு வரப்பட்டது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அந்த கடத்தல் தங்கத்தை பறிமுதல் செய்தோம். தொடர்ந்து அவரிடம் விசாரித்து வருகிறோம். பர்தாவில் எப்போதும் இதுபோன்ற பாசிமணிகள் இருப்பது வழக்கம். ஆனால், முதல் முறையாக அதில் தங்கத்தை கலந்து கடத்தி வந்தது குறிப்பிடத்தக்கது” என்றார்.

மேலும் செய்திகள்