பணப்பிரச்சினையில் தாய், மகன் விஷம் குடித்து தற்கொலை விராரில் பரிதாபம்

பணப்பிரச்சினையில் தாய், மகன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட பரிதாப சம்பவம் விராரில் நடந்துள்ளது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2019-05-11 23:30 GMT
வசாய்,

பணப்பிரச்சினையில் தாய், மகன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட பரிதாப சம்பவம் விராரில் நடந்துள்ளது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தாய், மகன் பிணமாக மீட்பு

பால்கர் மாவட்டம், விரார் கிழக்கு பகுதியில் உள்ள சாய் ஹெரிடேஜ் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் சரஸ்வதி (வயது42). இவரது மகன் வினய் (25). கிரிக்கெட் வீரர். விராரில் உள்ள தனியார் கிளப் ஒன்றில் விளையாடி வந்தார்.

இந்தநிலையில், நேற்று முன்தினம் காலை முதல் இரவு வரை தாயும், மகனும் வீட்டை விட்டு வெளியே வரவில்லை. மேலும் வீடும் பூட்டியே கிடந்தது. இதனால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் அன்று இரவு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

அதன்பேரில் விரைந்து சென்ற போலீசார் வீட்டை திறந்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு தாய், மகன் 2 பேரும் மயங்கிய நிலையில் கிடந்தனர். இதையடுத்து போலீசார் 2 பேரையும் மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களை பரிசோதித்த டாக்டர்கள், தாய், மகன் 2 பேரும் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறினர்.

தற்கொலை

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில், தாய், மகன் 2 பேரும் பணப்பிரச்சினையில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘சரஸ்வதி வங்கியில் கடன் வாங்கி திரும்ப செலுத்த முடியாமல் அவதி அடைந்து உள்ளார். இதனால் அவர் மகனுடன் விஷம்குடித்து தற்கொலை செய்து இருக்கலாம் என நினைக்கிறோம்’’ என்றார்.

தாய், மகன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் விரார் பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்