சேலத்தில் 16 பள்ளி வாகனங்களின் தகுதிச்சான்று ரத்து - வட்டார போக்குவரத்து அதிகாரிகள் நடவடிக்கை

சேலத்தில் 16 பள்ளி வாகனங்களின் தகுதிச்சான்றுகளை வட்டார போக்குவரத்து அதிகாரிகள் ரத்து செய்துள்ளனர்.

Update: 2019-05-11 23:33 GMT
சேலம்,

தமிழகத்தில் தற்போது பள்ளி மாணவ-மாணவிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. அதையொட்டி, தனியார் பள்ளிகளில் மாணவ-மாணவிகளை அழைத்து வரும் வாகனங்களை சேலம் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் சோதனை நடத்த முடிவு செய்தனர்.

இந்தநிலையில் சேலம் 3 ரோடு அருகே உள்ள ஜவகர்மில் திடலில் நேற்று காலை அனைத்து பள்ளி வாகனங்களும், அதன் டிரைவர்களும் வரவழைக்கப்பட்டு மாலை வரை ஆய்வு நடத்தப்பட்டது. சேலம் மேற்கு, கிழக்கு, தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு உட்பட்ட 90-க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளை சேர்ந்த 401 வாகனங்கள் ஒரே இடத்தில் நிறுத்தி சோதனை நடந்தது. சேலம் உதவி கலெக்டர் செழியன் தலைமையில் வட்டார போக்குவரத்து அலுவலர் தாமோதரன், சரவணன் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர்கள், போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் ஆய்வை நடத்தினர்.

பள்ளி வாகனங்களில் அவசரவழி கதவு சரியாக செயல்படுகிறதா? என்றும், பிரேக் சரியாக பிடிக்கிறதா?, என்றும், தகுதிச்சான்று புதுப்பிக்கப்பட்டுள்ளதா? என்றும் சோதனை மேற்கொண்டனர். மேலும், வாகன ஓட்டிகளுக்கு டிரைவிங் லைசென்சு, வாகனங்களுக்கு இன்சூரன்ஸ் உள்ளதா? என்றும், முதலுதவி பெட்டியில் தேவையான மருந்து உள்ளதா? என்றும் தீயணைப்பு கருவி காலாவதியாகி விட்டதா?, வேகக்கட்டுப்பாட்டு கருவி பொருத்தப்பட்டுள்ளதா? என்பது போன்ற குறைபாடுகள் குறித்தும் ஆய்வு நடத்தப்பட்டது.

தனியார் பள்ளிகளின் 401 வாகனங்கள் சோதனை மேற்கொள்ளப்பட்டதில் அவற்றில் 16 வாகனங்களுக்கு பெரிய அளவிலான குறைபாடு கண்டறியப்பட்டு அவற்றின் தகுதிச்சான்றை(எப்.சி.) அதிகாரிகள் ரத்து செய்தனர். மேலும் சில வாகனங்களுக்கு சிறிய குறைபாடுகள் கண்டறியப்பட்டு அவற்றை சரி செய்ய வருகிற 31-ந் தேதி வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து வட்டார போக்குவரத்து அதிகாரிகள், டிரைவர்களிடம் விபத்து இல்லாமலும், சாலைவிதிகளை கடைபிடித்தும் வாகனங்களை ஓட்டவேண்டும் எனவும் அறிவுரை வழங்கினர். மேலும் வாகனத்தில் தீப்பிடித்தால் அதை எப்படி விரைவாக செயல்பட்டு அணைப்பது என சேலம் தீயணைப்பு நிலைய வீரர்கள் செயல்முறை விளக்கம் செய்து காண்பித்தனர்.

மேலும் செய்திகள்