தடையை மீறி படகு சவாரி சென்றபோது பழவேற்காடு ஏரியில் படகுகள் மோதல்; நீரில் மூழ்கி சென்னை பெண் பலி 9 பேர் உயிர் தப்பினர்

பழவேற்காடு ஏரியில் தடையை மீறி சவாரி சென்றபோது 2 படகுகள் மோதிக்கொண்டன. இதில் நிலைதடுமாறி நீரில் மூழ்கிய பெண் பரிதாபமாக உயிரிழந்தார். 9 பேர் உயிர்தப்பினர்.

Update: 2019-05-12 22:15 GMT
பொன்னேரி,

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே உள்ளது பழவேற்காடு ஏரி. இந்த ஏரியில் படகு சவாரி செய்ய மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. ஆனால் தடையை மீறி தினந்தோறும் படகு சவாரி நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் நேற்று மாலை 6 மணியளவில் பழவேற்காட்டில் நடந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்னை காசிமேடு பகுதியை சேர்ந்த மேரி, மைக்கேல், சகாயமேரி, பெரியநாயகி உள்பட 10 பேர் பழவேற்காட்டுக்கு வந்தனர்.

பின்னர் பழவேற்காடு ஏரியும் - கடலும் கலக்கும் இடமான முகத்துவார பகுதிக்கு படகில் சென்றனர். ஏரியின் நடுவே சென்றபோது சுற்றுலாப் பயணிகளை ஏற்றி வந்த மற்றொரு படகு, இந்த படகு மீது மோதியது.

இதில் நிலைதடுமாறி சென்னை சுற்றுலா பயணிகள் 10 பேரும் தண்ணீரில் மூழ்கினர். உடனே ஏரியில் மீன் பிடித்துக்கொண்டு இருந்த மீனவர்கள் விரைந்து வந்து 10 பேரையும் மீட்டு பழவேற்காட்டில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

இதில் காசிமேட்டை சேர்ந்த ஜான் என்பவரது மனைவி மேரி (வயது 40) என்பவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். உயிருடன் மீட்கப்பட்ட மற்ற 9 பேருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பின்னர் போலீசார், மேரியின் உடலை கைப்பற்றி பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். தடையை மீறி படகு சவாரி சென்றபோது ஏற்பட்ட விபத்தில் பெண் உயிரிழந்த சம்பவம் சுற்றுலாப்பயணிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்