10 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த சேலத்தை சேர்ந்த பிரபல கொள்ளையன் கைது

10 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த சேலத்தை சேர்ந்த பிரபல கொள்ளையனை, போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-05-13 22:45 GMT

சேலம்,

சேலம் டவுன் முகமது புறா பகுதியை சேர்ந்தவர் முகமது யூசுப் (வயது 25). பிரபல கொள்ளையன். இவர் கடந்த 2009–ம் ஆண்டு சேலம் சாரதா கல்லூரி சாலை பகுதியை சேர்ந்த பெண் ஒருவரிடம் கத்தியை காட்டி மிரட்டி, அவர் அணிந்து இருந்த 2½ பவுன் சங்கிலி மற்றும் ஒரு செல்போன் ஆகியவற்றை பறித்துக்கொண்டு தப்பி ஓடிவிட்டார்.

இதுகுறித்த புகாரின் பேரில் அழகாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து முகமது யூசுப்பை கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். இதில் ஜாமீனில் வெளியில் வந்த அவர் அதன் பிறகு தலைமறைவாகி விட்டார். இதையொட்டி அழகாபுரம் போலீசார் முகமது யூசுப்பை தேடி வந்தனர். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை.

கடந்த 10 ஆண்டுகளாக தலைமறைவாக உள்ள கொள்ளையனை கண்டுபிடிக்க சேலம் மாநகர போலீஸ் கமி‌ஷனர் சங்கர் உத்தரவின் பேரில் அழகாபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன், சப்–இன்ஸ்பெக்டர் ஜெயராமன் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் தலைமறைவான முகமது யூசுப்பை பல இடங்களில் தேடிவந்தனர். அவர் கேரள மாநிலம் பாலக்காடு பகுதியில் பதுங்கி இருப்பது தெரிந்தது.

இதையொட்டி தனிப்படை போலீசார் பாலக்காடு விரைந்து சென்று அங்கு தலைமறைவாக இருந்த முகமது யூசுப்பை கைது செய்து சேலத்திற்கு அழைத்து வந்தனர். பின்னர் சேலம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சேலம் மத்திய சிறையில் நேற்று அடைத்தனர். கடந்த 10 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த பிரபல கொள்ளையனை கைது செய்த போலீசாரை, கமி‌ஷனர் சங்கர் பாராட்டினார்.

மேலும் செய்திகள்