லாரி உரிமையாளர்கள்-போலீசார் இடையே தள்ளுமுள்ளு திருத்துறைப்பூண்டியில் பரபரப்பு

திருத்துறைப்பூண்டியில் லாரி உரிமையாளர்கள்-போலீசார் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2019-05-13 22:30 GMT
திருத்துறைப்பூண்டி,

தஞ்சை, திருவாரூர், நாகை ஆகிய மாவட்டங்களில் உள்ள அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் இருந்து நெல் மூட்டைகள் தனியார் லாரிகள் மூலம் அரவை மில்லுக்கும், சேமிப்பு கிடங்குகளுக்கும் கொண்டு செல்லப்படுவது வழக்கம்.

இதற்கான லாரி வாடகை மற்றும் சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கான கூலி தொகையை (மாமூல்) தமிழக அரசு குறைத்து விட்டதாக குற்றம் சாட்டி லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகளின் பேச்சுவார்த்தைக்கு பிறகு உடன்பாடு ஏற்பட்டதால் போராட்டம் கைவிடப்பட்டது.

ஆர்ப்பாட்டம்

இந்த நிலையில் சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கான கூலி தொகையை கொடுக்க அரிசி ஆலை உரிமையாளர்கள் மறுப்பதாக கூறி லாரி உரிமையாளர்கள் திருத்துறைப்பூண்டி கிழக்கு கடற்கரை சாலை ரவுண்டானா பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் லாரி உரிமையாளர் சங்க தலைவர் ஆறுமுகம், கவுரவ தலைவர் விஸ்வநாதன், செயலாளர் சீனிவாசன், துணை தலைவர் சேகர், துணை செயலாளர் குணசேகரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இதில் அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு சொந்தமான லாரிகளில் நெல் மூட்டைகளை ஏற்றக்கூடாது என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து வலியுறுத்தப்பட்டன.

தள்ளுமுள்ளு

அப்போது லாரி உரிமையாளர்கள் அங்கு உள்ள தனியார் எடைமேடைக்கு எடை போட வந்த அரிசி ஆலை உரிமையாளர்களின் லாரிகளை திடீரென மறித்தனர். அவர்களை போலீசார் தடுக்க முயன்றனர். இதனால் லாரி உரிமையாளர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதையடுத்து போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட லாரி உரிமையாளர்கள் 55 பேரை கைது செய்தனர். முன்னதாக லாரி உரிமையாளர்களை போலீசார் குண்டு கட்டாக தூக்கி போலீஸ் வேனில் ஏற்றினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்