கோட்சேவின் மதத்தை பற்றி கமல்ஹாசன் பேசியது தவறு அரவக்குறிச்சி தேர்தல் பிரசாரத்தில் டி.டி.வி. தினகரன் பேச்சு

கோட்சேவின் மதத்தை பற்றி கமல்ஹாசன் பேசியது தவறு என அரவக்குறிச்சி தேர்தல் பிரசாரத்தில் டி.டி.வி. தினகரன் பேசினார்.

Update: 2019-05-14 23:15 GMT
கரூர்,

அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அ.ம.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சாகுல் ஹமீதை ஆதரித்து அக்கட்சியின் பொதுசெயலாளர் டி.டி.வி. தினகரன் நேற்று மாலை பிரசாரம் செய்தார்.

அப்போது அவர் பேசியதாவது:-

எல்லா தொகுதிகளிலும் தோற்றுவிடுவோம் என அவர்களுக்கு (அ.தி.மு.க.) பயம் வந்துவிட்டது. துரோகம் என்றைக்கும் வென்றதாக வரலாறு கிடையாது. 18 தொகுதிகளிலும் அ.தி.மு.க. தோற்றுவிடுவோம் என்ற பயத்தில் எனது ஆதரவாளர்கள் 3 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்ய நோட்டீசு அனுப்பி உள்ளனர். அதற்கு நீதிமன்றத்தில் தற்போது 3 பேரும் தடை வாங்கி விட்டனர்.

நடிகர் கமல்ஹாசன் தேவையில்லாமல் சினிமா வசனம் மாதிரி இங்கு பேசியிருக்கிறார். சினிமாவில் வசனம் எழுதி பேசினால் கேட்க நன்றாக இருக்கும். ஒரு பரபரப்பை உண்டாக்குவதற்காக அவர் பேசியிருக்கிறார். கமல்ஹாசன் ‘விஸ்வரூபம்’ என ஒரு படம் எடுத்தார். அந்த படம் பெரிதாக ‘விஸ்வரூபம்’ எடுத்து இந்தியாவை விட்டே காலி செய்து போய்விடுவேன் என கமல்ஹாசன் தெரிவித்தார்.

முஸ்லிம்களுக்கு எதிராக படம் எடுத்ததாக சந்தேகம் வந்ததால், அந்த படத்தை விளக்க வேண்டியது படத்தயாரிப்புகளின் முறை. நாட்டில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படக்கூடாது என்பதற்காக அதனை சரி செய்ய ஜெயலலிதா கூறினார். இதனால் ஜெயலலிதா மீது அவருக்கு கோபம். எந்த மதத்தையும் புண்படுத்தி பேச வேண்டிய அவசியம் என்ன?. இந்து, கிறிஸ்துவம், முஸ்லிம் என மதம் பற்றி எதுக்கு பேச வேண்டும். யாரோ ஒருத்தர் கொலைகாரர் என்றால் அதற்காக மதத்தை பற்றி பேச வேண்டிய அவசியம் என்ன? கோட்சே காந்தியை சுட்டுகொன்றதை யாருமே ஏற்று கொள்ளமாட்டோம். அவர் என்ன மதம் என்று நாம் பார்த்து கொண்டிருப்பாமா?.

இந்திரா காந்தியை ஒரு சீக்கியர் தான் கொன்றார். மன்மோகன் சிங்கையே பிரதமராக்கினார் சோனியா காந்தி. யாரோ ஒருத்தர் தப்பு செய்தால், ஒரு கொலைகாரனுக்காக மதத்தை பற்றி இவர் (கமல்ஹாசன்) பேசலாமா? அது தவறு தானே. கோட்சே எந்த மதம் என்றே நமக்கு தெரியவில்லை. அந்த பெயர் ரஷ்யன் பெயர் போல உள்ளது. அந்த கோட்சேவை இந்து தீவிரவாதி என பேசியிருக்கிறார். இது தேவையா?. காந்தியடிகளை கோட்சே துப்பாக்கியால் சுட்டுகொன்றதில் மதம் எங்கிருந்து வந்தது?. தமிழக அரசு சினிமாவை போல ஏதோ செய்து விடும் என அவரே (கமல்ஹாசன்) பிரசாரத்தை ரத்து செய்து விட்டு சென்றார்.

நடிகர் கமல்ஹாசனின் நாக்கை வெட்டுவேன் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசி உள்ளார். இது தவறில்லையா?. துரோகத்தை பற்றி நான் பேசினால் வழக்கு போடுவோம் என்கின்றனர். நீங்கள் எத்தனை வழக்குகள் போட்டாலும் பார்த்துக்கொள்ளலாம். வருகிற 23-ந் தேதிக்கு பிறகு நீங்கள் (அ.தி.மு.க.) வழக்குகள் போடுவதற்கு இருக்கிறீர்களா? என்று பார்ப்போம். உங்கள் மீது ஏதும் வழக்குகள் வராமல் பார்த்துகொள்ளுங்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்