பாளையங்கோட்டை அருகே, வீட்டில் குண்டு வெடித்த வழக்கில் பெண் கைது

பாளையங்கோட்டை அருகே வீட்டில் குண்டு வெடித்த வழக்கில் பெண்ணை போலீசார் கைது செய்தனர். அவருடைய மகன்களை தேடி வருகின்றனர்.

Update: 2019-05-14 22:30 GMT
நெல்லை, 

பாளையங்கோட்டை அருகே உள்ள மேலப்பாட்டத்தை சேர்ந்தவர் கணேசன். இவருக்கு சொந்தமாக அந்த ஊரில் புது வீடு உள்ளது. இந்த வீட்டுக்கு அவருடைய மகன்கள் சிவா என்ற நாராயணன், அருள் ஆகியோர் அவ்வப்போது வந்து சென்றனர். கடந்த 10-ந் தேதி நள்ளிரவில் வீட்டின் சமையல் அறையில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த நாட்டு வெடிகுண்டுகள் வெடித்தன. இதில் வீட்டின் ஜன்னல் உடைந்து சேதம் அடைந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்த பாளையங்கோட்டை தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ரகுபதிராஜன் தலைமையில் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில், முக்கிய பிரமுகர்களை வெடிகுண்டு வீசி கொல்ல சதித்திட்டம் தீட்டிய தகவல் தெரியவந்தது. அதாவது இவர்களுக்கும், மற்றொரு சமுதாயத்தை சேர்ந்தவர்களுக்கும் முன்விரோதம் இருந்து வருகிறது.

குறிப்பாக பாளையங்கோட்டை கே.டி.சி. நகரில் நடந்த ஒரு கொலையில் தொடர்புடையவர்கள் நெல்லை கோர்ட்டில் ஆஜராகி வருகின்றனர். அந்த கொலைக்கு பழிக்குப்பழியாக, கோர்ட்டில் ஆஜராக வரும்போது, அவர்களை வெடிகுண்டுகளை வீசி கொலை செய்ய முடிவு செய்து, அதற்கு தேவையான வெடிகுண்டுகளை தயாரித்து வைத்திருந்தபோது அவை வெடித்தது தெரியவந்தது.

இந்த குண்டு வெடிப்பு குறித்து பாளையங்கோட்டை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து வீட்டின் உரிமையாளர் கணேசன் மனைவி மாரியம்மாள் (வயது 44) என்பவரை நேற்று கைது செய்தனர். பின்னர் அவர் நெல்லை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக சிவா, அருள் உள்பட மேலும் 3 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்