வெள்ளிச்சந்தை அருகே பரிதாபம் காதல் திருமணம் செய்த வாலிபர் குளத்தில் மூழ்கி பலி

வெள்ளிச்சந்தை அருகே காதல் திருமணம் செய்த வாலிபர் குளத்தில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.

Update: 2019-05-16 22:15 GMT
ராஜாக்கமங்கலம்,

ஆரல்வாய்மொழி அழகிய நகரை சேர்ந்தவர் இளையராஜா (வயது 35). இவர் ராஜாக்கமங்கலம் பகுதியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் உதவியாளராக பணியாற்றி வந்தார்.

இவருக்கும், வெள்ளிச்சந்தை காலனி பகுதியை சேர்ந்த தங்கராஜா மகள் வினோதினிக்கும் காதல் ஏற்பட்டது. பின்னர் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இந்த நிலையில் வினோதினி கர்ப்பமானார். இதனையடுத்து வெள்ளிச்சந்தையில் உள்ள தனது தந்தையின் வீட்டுக்கு வினோதினி சென்றார். இளையராஜாவும் மனைவியுடன் சென்று தங்கினார்.

நேற்று முன்தினம் மாலை இளையராஜா, அந்த பகுதியில் உள்ள கண்ணமங்கலம் குளத்தில் குளிக்க சென்றார். ஆனால், நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அவரை பல இடங்களில் தேடினர். அப்போது, குளத்தின் கரையில் இளையராஜாவின் மோட்டார் சைக்கிள் மற்றும் துணிகள் இருப்பதை அப்பகுதி மக்கள் கண்டனர். உடனே இதுகுறித்து வெள்ளிச்சந்தை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்த வெள்ளிச்சந்தை இன்ஸ்பெக்டர் தங்கராஜ், சப்–இன்ஸ்பெக்டர் சைய்யது நிஷார் அகமது ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். இதற்கிடையே இளையராஜா உடல் குளத்தில் பிணமாக மிதந்ததை பொதுமக்கள் பார்த்தனர். பின்னர் அவருடைய உடலை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். அப்போது உடலை பார்த்து கர்ப்பிணியான மனைவி வினோதினி கதறி அழுதது, கல்நெஞ்சையும் கரைய வைப்பதாக இருந்தது. தொடர்ந்து இளையராஜாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

போலீசாரின் விசாரணையில், இளையராஜா படித்துறையில் இறங்கிய போது தவறி விழுந்து குளத்தில் மூழ்கி இறந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

மேலும் இதுகுறித்து வெள்ளிச்சந்தை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். காதல் திருமணம் செய்த வாலிபர் குளத்தில் மூழ்கி இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்