திருச்சியில் ஓட்டல்கள், டீக்கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அதிரடி சோதனை

திருச்சியில் ஓட்டல்கள், டீக்கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினார்கள். இந்த சோதனையில் புகையிலை மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Update: 2019-05-16 23:00 GMT
திருச்சி,

தமிழகம் முழுவதும் கடந்த ஜனவரி மாதம் முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டது. ஆனாலும் தடையை மீறி ஒரு சில கடைகளில் பிளாஸ்டிக் பைகள், கப்புகள் போன்றவற்றை விற்பனைக்காக வைத்துள்ளனர். இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் அவ்வப்போது அதிரடி சோதனை நடத்தி பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து வருகிறார்கள்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு திருச்சி பெரியகடைவீதி, அல்லிமால்தெருவில் மாநகராட்சி அதிகாரிகள் கடைகளில் சோதனை நடத்தி பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்ததுடன், சம்பந்தப்பட்ட கடைகளுக்கு அபராதமும் விதித்தனர்.

பறிமுதல்

இந்தநிலையில் நேற்று காலை திருச்சி பாரதிதாசன் சாலையில் உள்ள டீக்கடை, கோர்ட்டு அருகே உள்ள ஓட்டல்கள் மற்றும் டீக்கடைகளில் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் சித்ரா தலைமையில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினார்கள். இந்த சோதனையில் 10 கிலோ புகையிலை பொருட்கள், 5 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள், மேலும் சில ஓட்டல்களில் பதுக்கி வைத்து இருந்த 15 கிலோ கெட்டுப்போன இறைச்சி வகைகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இதேபோல் தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் சோதனை நடத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். 

மேலும் செய்திகள்