பழனியில், கள்ளக்காதல் ஜோடி தூக்குப்போட்டு தற்கொலை

பழனியில் தனியார் தங்கும் விடுதியில் கள்ளக்காதல் ஜோடி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது.

Update: 2019-05-16 23:00 GMT
பழனி,

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு கச்சேரி தெருவை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 41). இவர் அந்த பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணமாகி மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். சங்ககிரி அருகே உள்ள கருவேப்பிலைப்பட்டியை சேர்ந்த கந்தசாமி மகள் புஷ்பலதா (21).

இவர் திருமணமாகி கணவரை பிரிந்து பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் சக்திவேலுக்கும், புஷ்பலதாவுக்கும் இடையே கள்ளக்காதல் இருந்து வந்துள்ளது. இதை இருவரின் வீட்டாரும் கண்டித்துள்ளனர். இதுதொடர்பாக இரு வீட்டாருக்கும் இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து வாழ்க்கையில் வெறுப்படைந்த கள்ளக்காதல் ஜோடி தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்தனர். ஆகவே இருவரும் நேற்று முன்தினம் பழனிக்கு வந்தனர். பின்னர் அடிவாரம் பகுதியில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கினர். இந்நிலையில் நேற்று மாலை வரை அவர்கள் தங்கியிருந்த அறை திறக்கப்படாமல் பூட்டியே கிடந்தது. இதனால் சந்தேகமடைந்த விடுதி ஊழியர்கள், இதுகுறித்து பழனி டவுன் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் கதவை திறந்து பார்த்தபோது, இருவரும் தூக்கில் பிணமாக தொங்கிய நிலையில் இருந்தனர். இதையடுத்து அவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பழனி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்