கொசு மருந்தை குடித்த குழந்தை பலி விளையாடிக் கொண்டிருந்த போது பரிதாபம்

காரைக்குடியில் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை, கொசு மருந்தை குடித்ததால் பரிதாபமாக இறந்தது.

Update: 2019-05-17 23:00 GMT

காரைக்குடி,

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பாரதி நகரைச் சேர்ந்தவர் ரவீந்திரன். இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய 10 மாத ஆண் குழந்தை சாய்ஆத்விக். ரவீந்திரன் வேலைக்கு சென்ற நிலையில், அவருடையை மனைவி வீட்டில் வேலை செய்து கொண்டிருந்தார்.

இந்தநிலையில் குழந்தை வீட்டில் தவழ்ந்த நிலையில் விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது வீட்டில் விளையாட்டு பொருட்கள் கிடந்ததால், குழந்தை அந்த பொருட்களில் ஒவ்வொன்றாக வாயில் வைத்து கடித்தபடி விளையாடிக் கொண்டிருந்தது. அந்த விளையாட்டு பொருட்களில் கொசுக்களை விரட்டும் மருந்து உள்ள பாட்டிலும் இருந்துள்ளது.

அந்த பாட்டிலை குழந்தை எடுத்து கடித்தபடி அதில் இருந்த கொசு விரட்டும் மருந்தை குடித்து விட்டது. சிறிது நேரத்தில் குழந்தை மயக்கமாகி கிடந்ததை பார்த்த தாய், இதுகுறித்து கணவரிடம் கூறியுள்ளார். அவர் விரைந்து வந்து காரைக்குடியில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

பின்பு அங்கிருந்து குழந்தை மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி குழந்த் சாய்ஆத்விக் பரிதாபமாக இறந்தது. இதுகுறித்து காரைக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்