திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணும் பணியில் 288 பேர் ஈடுபடுவார்கள் - கலெக்டர் சிவராசு தகவல்

திருச்சி நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணும் பணியில் மத்திய, மாநில அரசு பணியாளர்கள் 288 பேர் ஈடுபடுவார்கள் என்று கலெக்டர் சிவராசு கூறினார்.

Update: 2019-05-17 23:41 GMT
திருச்சி,

திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் பதிவான வாக்குகளுடன் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பஞ்சப்பூர் சாரநாதன் பொறியியல் கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளன. வருகிற 23-ந்தேதி காலை 8 மணிக்கு வாக்கு எண்ணும் பணியானது தொடங்க இருக்கிறது. இந்நிலையில் திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று காலை வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடவுள்ள பணியாளர்களுக்கு வாக்கு எண்ணிக்கை தொடர்பான பயிற்சி நடைபெற்றது. இந்த பயிற்சியை திருச்சி மாவட்ட கலெக்டரும், தேர்தல் நடத்தும் அதிகாரியுமான சிவராசு தொடங்கி வைத்து கூறியதாவது:-

திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதியில் 25 சுற்றுகளாகவும், திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதியில் 20 சுற்றுகளாகவும், திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதியில் 19 சுற்றுகளாகவும், திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதியில் 21 சுற்றுகளாகவும், கந்தர்வகோட்டை சட்டமன்ற தொகுதியில் 17 சுற்றுகளாகவும், புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் 19 சுற்றுகளாகவும் வாக்குகள் எண்ணப்படும்.

வாக்கு எண்ணும் பணியில் மத்திய மற்றும் மாநில அரசு பணியாளர்கள் 288 பேர் ஈடுபட உள்ளனர். ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் வாக்கு எண்ணுவதற்காக 14 மேஜைகள் அமைக்கப்பட்டு வாக்குகள் எண்ணப்பட உள்ளது. மத்திய அரசில் பணிபுரியும் நுண்பார்வையாளர் ஒருவரும், மாநில அரசில் பணிபுரியும் பணியாளர் வாக்கு எண்ணிக்கை கண்காணிப்பாளராகவும், உதவியாளர் ஒருவரும் என ஒரு மேஜைக்கு 3 பணியாளர்கள் வீதம் மொத்தம் 252 பணியாளர்களும் மற்றும் 36 மாற்றுப் பணியாளர்கள் தயார்நிலையில் இருப்பார்கள்.

23-ந்தேதி காலை 6 மணிக்கு வாக்கு எண்ணும் பணியாளர்கள் சாரநாதன் பொறியியல் கல்லூரிக்கு வருவார்கள். 7.30 மணிக்கு வாக்கு எண்ணிக்கைக்கு தயார்நிலையில் இருப்பார்கள். காலை 8 மணிக்கு அஞ்சல் வாக்கு எண்ணிக்கை முதலில் தொடங்கப்படும். உச்சநீதிமன்ற உத்தரவின்படி ஒரு சட்டமன்ற தொகுதிக்கு, 5 வாக்களிப்பதை உறுதி செய்யும் கருவியில் (வி.வி.பேட்) உள்ள வாக்குச்சீட்டுகளை எண்ணி சரிபார்க்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

இப்பயிற்சியில் மாவட்ட வருவாய் அதிகாரி சாந்தி, தேர்தல் பிரிவு தாசில்தார் முத்துசாமி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்