பொங்கலூர் அருகே கத்தியை காட்டி மிரட்டி 14 பவுன் நகை பறிப்பு

பொங்கலூர் அருகே கத்தியை காட்டி மிரட்டி 14 பவுன் நகையை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.

Update: 2019-05-18 23:14 GMT
பொங்கலூர்,

பொங்கலூர் அருகே உள்ள காமநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் ஜெகதீஷ்(வயது 40). இவர் தனது மனைவி ராஜேஸ்வரி(33), 2 மகள்கள், தந்தை பழனிசாமி(65), தாய் வள்ளியம்மாள்(60) ஆகியோருடன் தோட்டத்து வீட்டில் வசித்து வருகிறார். இந்த நிலையில் சம்பவத்தன்று ஜெகதீஷ் தனது தந்தையுடன் வெளியே சென்றுவிட்டார். இரவு 8 மணியளவில் ராஜேஸ்வரி, அவரது 2 மகள்கள் மற்றும் வள்ளியம்மாள் ஆகியோர் வீட்டில் சாப்பிட்டு கொண்டிருந்தனர். அப்போது 5 பேர் கொண்ட கும்பல் ஒன்று திடீரென வீட்டிற்குள் புகுந்தது. பின்னர் அவர்கள் கொண்டு வந்திருந்த கத்தியை காட்டி மிரட்டி நகைகளை கழற்றி கொடுக்குமாறு மிரட்டியுள்ளனர். கையில் கத்தி வைத்திருப்பதை பார்த்த இருவரும் பயந்துபோய் தங்கள் கழுத்தில் அணிந்திருந்த 14 பவுன் நகைகளை கழற்றி அவர்களிடம் கொடுத்துள்ளனர். அதனை வாங்கிக்கொண்ட மர்ம நபர்கள் 5 பேரும் அங்கிருந்து தப்பிச்சென்று விட்டனர்.

இதுகுறித்து ராஜேஸ்வரி தனது கணவர் ஜெகதீஷிடம் போன் மூலம் தகவல் தெரிவித்துள்ளார். உடனடியாக வீட்டிற்கு வந்த ஜெகதீஷ் காமநாயக்கன்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் மர்ம நபர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் காமநாயக்கன்பாளையம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்