தஞ்சையில் துணிகரம்: ஸ்கூட்டரில் தாயுடன் சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு

தஞ்சையில் ஸ்கூட்டரில் தாயுடன் சென்ற பெண்ணிடம் நகையை பறித்துச்சென்ற 2 மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Update: 2019-05-19 22:30 GMT
தஞ்சாவூர்,

தஞ்சை தொல்காப்பியர் சதுக்கம் அருகே உள்ள வெங்கடேஸ்வரா நகரை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவருடைய மகள் சங்கவிதரணி (வயது26). இவர் கல்லூரி படிப்பை முடித்து விட்டு ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு தனது தாயை அழைத்துச்செல்வதற்காக ஸ்கூட்டரில் தஞ்சை ரெயில் நிலையத்துக்கு வந்தார்.

பின்னர் தாயை அழைத்துக்கொண்டு வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். ஸ்கூட்டரை சங்கவிதரணி ஓட்டிச்சென்றார். தஞ்சை- பட்டுக்கோட்டை சாலையில் உள்ள மேம்பாலம் பகுதியில் சென்ற போது, அவர்களுக்கு பின்னால் மோட்டார் சைக்கிளில் 2 மர்ம நபர்கள் வந்தனர். திடீரென அவர்கள் சங்கவிதரணி கழுத்தில் கிடந்த 3½ பவுன் நகையை பறித்தனர்.

போலீசில் புகார்

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் திருடன், திருடன் என சத்தம் போட்டார். அவருடைய சத்தம் கேட்டு, அந்த பகுதியில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். அதற்குள் 2 மர்ம நபர்களும் நகையுடன் அங்கிருந்து தப்பிச்சென்று விட்டனர். இது குறித்து சங்கவிதரணி தஞ்சை தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகையை பறித்துச்சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்