கொழும்பில் இருந்து கடத்தல் சென்னை விமானநிலையத்தில் ரூ.50 லட்சம் தங்கம் பறிமுதல் பெண் உள்பட 7 பேரிடம் விசாரணை

கொழும்பில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு கடத்தி வரப்பட்ட ரூ.50 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக பெண் உள்பட 7 பேரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2019-05-20 22:15 GMT
ஆலந்தூர்,

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு வெளிநாட்டில் இருந்து வரும் விமானத்தில் தங்கம் கடத்தப்பட்டு வருவதாக விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர். அப்போது சென்னைக்கு இலங்கை தலைநகர் கொழும்பில் இருந்து விமானம் வந்தது.

இந்த விமானத்தில் பயணம் செய்த சென்னை துரைப்பாக்கத்தை சேர்ந்த சதக்கத்துல்லா (வயது 57), கரூரை சேர்ந்த அழகர்சாமி (63), புதுக்கோட்டையை சேர்ந்த அன்வர்பாட்சா(47), ராமநாத புரத்தை சேர்ந்த அனீப்முகமது (37), யாசின் அராபத் (25), சையத் இப்ராகிம் (40), தஞ்சாவூரை சேர்ந்த பெண் ஏகாம்பாள்(42) ஆகியோரை நிறுத்தி சந்தேகத்தின்பேரில் விசாரித்தனர்.

அப்போது பெண் உள்பட 7 பேரும் முன்னுக்குப்பின் முரணாக பேசினார்கள். இதையடுத்து 7 பேரின் உடைமைகளை சோதனை செய்தபோது எதுவும் இல்லை. பின்னர் தனியறைக்கு அழைத்து சென்று சோதனை செய்தனர்.

அப்போது உள்ளாடைக்குள் தங்கத்தை மறைத்து வைத்து இருந்ததை கண்டுபிடித்தனர். 7 பேரிடம் இருந்தும் ரூ.50 லட்சம் மதிப்புள்ள 1 கிலோ 510 கிராம் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

பெண் உள்பட 7 பேரிடமும் யாருக்காக தங்கத்தை கடத்தி வந்தார்கள்? என்று சுங்க இலாகா அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்