அழகப்பபுரத்தில் பெண்ணிடம் 6 பவுன் சங்கிலி பறிப்பு

அழகப்பபுரத்தில் பெண்ணிடம் 6 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம ஆசாமியை போலீசார் தேடி வருகிறார்கள்.

Update: 2019-05-21 22:15 GMT
அஞ்சுகிராமம்,

அழகப்பபுரம், வளன்நகரை சேர்ந்தவர் ஜெயசேகர், கட்டிட தொழிலாளி. இவருடைய மனைவி சகாய புஷ்ப ரதி (வயது 45). இவர் நேற்று காலையில் அந்த பகுதியில் உள்ள சந்தையில் மீன் வாங்க புறப்பட்டார். செங்குளம் கரையில் சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்த போது, ஒரு வாலிபர் மோட்டார் சைக்கிளில் வந்தார்.

அந்த நபர் திடீரென சகாய புஷ்ப ரதியை வழிமறித்து அவரது கழுத்தில் கிடந்த 6 பவுன் தங்க சங்கிலியை பறித்தார். இதனால், அதிர்ச்சி அடைந்த அவர் ‘திருடன்... திருடன்...’ என கூச்சல் போட்டார். அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு விரைந்து வந்தனர். அதற்குள் அந்த நபர் மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்று விட்டார்.

போலீஸ் விசாரணை

இதுகுறித்து சகாய புஷ்ப ரதி அஞ்சுகிராமம் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபரை தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்