பாளையங்கோட்டையில் காதல் திருமணம் செய்த தொழிலாளி தற்கொலை

பாளையங்கோட்டையில் காதல் திருமணம் செய்த தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2019-05-23 22:00 GMT
நெல்லை,

பாளையங்கோட்டை பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 25). கூலி தொழிலாளி. இவருடைய மனைவி கவுரி (20). இவர்கள் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த நிலையில் மணிகண்டனின் பூர்வீக ஊரான நெல்லை அருகே திருப்பணிகரிசல்குளத்தில் கோவில் திருவிழா நடந்தது. அதில் கலந்து கொள்வதற்காக மணிகண்டனின் பெற்றோர் தங்களுடைய மகன், மருமகளை அழைத்தனர். ஆனால் கோவில் திருவிழாவுக்கு மணிகண்டன் செல்லவில்லை. கவுரி மட்டும் கோவில் திருவிழாவுக்கு சென்றார்.

இந்த நிலையில் கோவில் திருவிழா முடிந்ததும், கவுரி நேற்று காலையில் தனது வீட்டுக்கு திரும்பி வந்தார். அப்போது வீட்டில் மணிகண்டன் தூக்கில் பிணமாக தொங்கியதை பார்த்து அதிர்ச்சி அடைந்து அலறினார். இதுகுறித்து தகவல் அறிந்ததும், பாளையங்கோட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், மணிகண்டன் மன உளைச்சலில் தூக்குப்போட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது. தற்கொலை செய்த மணிகண்டனின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்