தஞ்சையில் ரத்தகாயங்களுடன் முதியவர் பிணம் கொலை செய்யப்பட்டாரா? போலீசார் விசாரணை

தஞ்சையில் ரத்தகாயங்களுடன் முதியவர் பிணமாக கிடந்ததால் அவர் கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2019-05-26 22:15 GMT
தஞ்சாவூர்,

தஞ்சை தென்கீழ்அலங்கத்தில் உள்ள மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியின் பின்புறம், டவுன் பஸ் நிலையத்திற்கு அருகே அகழியில் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ரத்தகாயத்துடன் பிணமாக கிடந்தார். காயத்துடன் முகம் வீங்கி இருந்ததுடன் கண்கள், நாக்கு வெளியே வந்த நிலையில் இருந்தது. இதை பார்த்த சிலர், தஞ்சை கிழக்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மகாதேவன், ஏட்டு கோபாலகிருஷ்ணன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

அதில் பிணமாக கிடந்தவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என உடனடியாக தெரியவில்லை. பின்னர் முதியவர் உடலை போலீசார் மீட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். முதியவர் இறந்து 2 நாட்கள் இருக்கும் என தெரிகிறது. அவரது உடலில் காயங்கள் இருப்பதால் யாராவது அடித்து கொலை செய்து இருக்கலாமோ? என்று போலீசார் சந்தேகப்படுகின்றனர். இருந்தாலும் பிரேத பரிசோதனையில் தான் உறுதியான தகவல் தெரியவரும்.

போலீசார் விசாரணை

முதியவரின் சட்டைப்பையில் வெற்றிலை சீவல் மட்டும் இருந்தது. இவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? எதற்காக இங்கே வந்தார்? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தென்கீழ்அலங்கம் பகுதியில் உள்ள வணிக நிறுவனங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் டவுன் பஸ் நிலையத்தின் நுழைவு பகுதியிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த கேமராக்களில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்