கருங்கல் அருகே துணிகரம் கிறிஸ்தவ ஆலயங்கள் உள்பட 5 இடங்களில் உண்டியல் கொள்ளை

கருங்கல் அருகே கிறிஸ்தவ ஆலயங்கள் உள்பட 5 இடங்களில் உண்டியல் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2019-05-26 22:15 GMT
கருங்கல்,

கருங்கல் அருகே மாதாபுரத்தில் காணிக்கை மாதா ஆலயம் உள்ளது. இங்கு நேற்று முன்தினம் பிரார்த்தனை முடிந்த பின்பு ஆலயத்தை பூட்டிவிட்டு சென்றனர். நேற்று காலையில் பிரார்த்தனைக்கு சென்றவர்கள் ஆலய கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே சென்ற போது, ஆலயத்தில் இருந்த 3 உண்டியல்கள் உடைக்கப்பட்டு காணிக்கை பணம் கொள்ளையடிக்கப் பட்டிருந்தது. இரவில் மர்ம நபர்கள் கதவை உடைத்து ஆலயத்திற்குள் புகுந்து காணிக்கை பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.இதுபோல், வடக்கு மாதாபுரத்தில் உள்ள புனித தோமையார் குருசடியிலும் உண்டியல் உடைக்கப்பட்டு காணிக்கை பணம் திருடப்பட்டிருந்தது.

மேலும், மாதாபுரத்தை அடுத்த கம்பிளார் சூசையப்பர் ஆலயத்திலும் மர்ம நபர்கள் உண்டியலை உடைத்து காணிக்கை பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த கருங்கல் போலீசார் சம்பவ இடங்களுக்கு சென்று விசாரணை நடத்தி கொண்டிருந்தனர். அப்போது, மேலும் 2 கோவில்களில் கொள்ளை நடந்திருப்பது தெரிய வந்தது.

மகாதேவர் கோவில்

கம்பிளாரில் சங்கரநாராயணர் குளத்து மகாதேவர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் புகுந்த மர்ம நபர்கள் சாமி அணிந்திருந்த 1 கிராம் தங்க பொட்டை திருடி உள்ள னர். பின்னர் திரும்ப செல்லும் போது உண்டியலை உடைத்து காணிக்கை பணத்தையும் கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதுபோல், மாதாபுரம் கிருஷ்ணன் கோவிலிலும் உண்டியல் உடைக்கப்பட்டு காணிக்கை பணம் கொள்ளையடிக்கப் பட்டது.

ஒரே கும்பல்

கொள்ளை நடந்த ஆலயம், கோவில் அனைத்தும் ஒரே சுற்றுவட்டாரத்தில் அமைந்துள்ளன. எனவே, இந்த கொள்ளையில் ஒரே கும்பலை சேர்ந்தவகள் ஈடுபட்டிருக்கலாம் எனத்தெரிகிறது. இந்த சம்பவங்கள் குறித்து கருங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கருங்கல் அருகே ஒரே இரவில் கிறிஸ்தவ ஆலயங்கள் உள்பட 5 இடங்களில் உண்டியல்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்