பேக்கரி மாஸ்டரை கொல்ல முயன்றவர் கைது

ராமநாதபுரம் நகரில் உள்ள பேக்கரி மாஸ்டரை கழுத்தை அறுத்து கொல்ல முயன்றவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2019-05-26 23:30 GMT

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரி எதிரில் உள்ள பேக்கரியில் திருச்சி மணப்பாறை இச்சடிபட்டி பகுதியை சேர்ந்தவர் செல்வம் என்பவரின் மகன் இளையராஜா(வயது27) என்பவர் கடந்த 5 ஆண்டுகளாக மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார். இவர் வேலை முடிந்து மாடியில் உள்ள அறையில் தூங்க சென்ற சிறிது நேரத்தில் பயங்கர சத்தம் கேட்டுள்ளது.

உடனடியாக கடை உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் மேலே சென்று பார்த்தபோது அங்கு படுக்கையில் கழுத்தில் ரத்தம் வழிய இளையராஜா துடித்துக்கொண்டிருந்தார். இதனை கண்ட ஊழியர்கள் உடனடியாக அவரை மீட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து இளையராஜாவை காப்பாற்றினர். இந்த சம்பவம் பற்றி அறிந்த ராமநாதபுரம் பஜார் போலீஸ் இன்ஸ்பெக்டர் தனபாலன் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.

அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த காட்சியை பார்த்தபோது கடையில் வேலை பார்த்த மற்றொரு மாஸ்டரான ராமநாதபுரம் அருகே உள்ள பெருங்களுர் பகுதியை சேர்ந்த சக்தி(39) என்பவர் வேகமாக சென்றது பதிவாகி இருந்தது. சம்பவத்திற்கு பின்னர் தலைமறைவான அவரை பஜார் போலீஸ் இன்ஸ்பெக்டர் தனபாலன் தலைமையிலான போலீசார் தீவிரமாக தேடிவந்தனர். இந்நிலையில் வீட்டில் பதுங்கியிருந்த சக்தியை போலீசார் மடக்கி பிடித்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் மேற்படி சக்தி மதுபோதையில் கடைக்கு வேலைக்கு வந்தாராம்.

இதனை கண்ட உரிமையாளர் கண்டித்து மறுநாள் வரும்படி கூறி அனுப்பினாராம். அப்போது அருகில் இளையராஜா இருந்ததால் சக்திக்கு அவமானமாகிபோனது. இதனால் மனம்உடைந்து காணப்பட்ட சக்தி வெளியே சென்றுவிட்டு சிறிதுநேரத்தில் திரும்பி வந்து இளநீர் வெட்டும் அரிவாளால் இளையராஜாவின் கழுத்தை அறுத்துள்ளார். அவர் கத்தி சத்தம்போடவே பயந்துபோய் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டாராம். இதனை தொடர்ந்து போலீசார் சக்தியை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்