மீன்பிடி தடை காலத்தையொட்டி விசைப்படகுகளை சீரமைக்கும் பணியில் சின்னமுட்டம் மீனவர்கள் தீவிரம்

குமரி கிழக்கு கடலோர பகுதியில் மீன்பிடி தடை காலம் வருகிற 16–ந் தேதி முடிகிறது. இதையொட்டி சின்னமுட்டம் மீனவர்கள் விசைப்படகுகள், வலைகள் போன்ற மீன்பிடி உபகரணங்களை சீரமைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

Update: 2019-05-27 22:45 GMT
கன்னியாகுமரி,

கடலில் மீன் வளத்தை காக்கும் வகையில், மீன்களின் இனப்பெருக்க காலத்தில் விசைப்படகுகள் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, தமிழகத்தில் கிழக்கு கடலோர பகுதியில் மீன்பிடி தடைக்காலம் கடந்த மாதம் 15–ந் தேதி தொடங்கியது. இதையொட்டி விசைப்படகு மீனவர்கள் ஆழ்கடலுக்கு சென்று மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டது. இதனால், மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் தங்களின் விசைப்படகுகளை கரையோரம் நிறுத்தி வைத்துள்ளனர்.

கன்னியாகுமரி அருகே சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தை தங்குதளமாக கொண்டு சுமார் 350 விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடித்து வருகிறார்கள். இவர்கள் தினமும் அதிகாலையில் ஆழ்கடலுக்கு புறப்பட்டு சென்று மீன்பிடித்து விட்டு இரவு கரைக்கு திரும்புவார்கள். தடைக்காலம் அமலுக்கு வந்ததையொட்டி இவர்கள் தங்களது படகுகளை கரையோரம் நிறுத்தி வைத்திருந்தனர்.

தடைக்காலம் வருகிற 16–ந் தேதி முடிவடைகிறது. இதையொட்டி சின்னமுட்டம் மீனவர்கள் கடலுக்கு செல்ல ஆயத்தமாகி வருகிறார்கள். குறிப்பாக படகுகளை பழுதுபார்த்தல், வலைகளை சீரமைத்தல், படகுகளுக்கு வர்ணம் பூசுதல் போன்ற பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்