பேரணாம்பட்டு அருகே மகனை கிணற்றில் தள்ளி கொன்று விட்டு தாய் தற்கொலை

பேரணாம்பட்டு அருகே மகனை கிணற்றில் தள்ளி கொலை செய்து விட்டு அதே கிணற்றில் குதித்து தாயும் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2019-05-27 18:09 GMT
வேலூர், 

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே உள்ள மத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் ருக்கு. இவரது மகள் ரூபினிக்கும் (வயது 29), குடியாத்தம் அருகே உள்ள கார்த்திகேயபுரம் கிராமத்தை சேர்ந்த பாண்டியனுக்கும் (32) கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. பாண்டியன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கொலை மற்றும் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறை சென்றார்.

முன்னதாக கர்ப்பிணியாக இருந்தபோது ரூபினி, தனது கணவனின் நடவடிக்கை பிடிக்காமல் அவரை பிரிந்து தாயாரின் வீட்டுக்கு வந்தார். அங்கு அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு முகேஷ் என பெயரிட்டார்.

தற்போது 4 வயதாகும் முகேஷ், தனியார் பள்ளியில் எல்.கே.ஜி.படித்து வந்தான். இந்த நிலையில் ஜாமீனில் வந்த பாண்டியன் தனது மனைவியின் வீட்டிற்கு கடந்த சனிக்கிழமை வந்து மகன் முகேஷை அழைத்து சென்றுள்ளார். பின்னர் ஞாயிற்றுக்கிழமை முகேசை மனைவியிடம் ஒப்படைத்து விட்டு திரும்பி சென்றதாக கூறப்படுகிறது.

இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்த ரூபினி மகன் முகேசுடன் நேற்று காலை வீட்டை விட்டு வெளியேறினார். அவரை காணாததால் அருகில் இருந்தவர்கள் தேடினர். இந்த நிலையில் நேற்று காலை மத்தூர் அருகில் தனியார் தோல் தொழிற்சாலை பக்கத்தில் உள்ள ஒரு கிணற்றில் ரூபினி பிணமாக மிதப்பதை பார்த்து அவரது வீட்டிற்கு தகவல் தெரிவித்தனர். ரூபினி தனது மகனை கிணற்றில் தள்ளி கொலை செய்து விட்டு தானும் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இது குறித்து தகவல் அறிந்த பேரணாம்பட்டு போலீசாரும், தீயணைப்பு வீரர்களும் விரைந்து வந்து ரூபினியின் உடலை மீட்டனர். ஆனால் முகேஷின் உடல் கிடைக்கவில்லை. அதைத்தொடர்ந்து கிணற்றில் இருந்த தண்ணீரை வெளியேற்றி முகேஷின் உடலையும் மீட்டனர்.

இது தொடர்பாக பேரணாம்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரின் உடலையும் பிரேத பரிசோதனைக்காக பேரணாம்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்