வெவ்வேறு சம்பவங்களில் 3 பேர் தற்கொலை

வெவ்வேறு சம்பவங்களில் 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.

Update: 2019-05-28 22:30 GMT
ஒட்டன்சத்திரம்,

ஊட்டியை சேர்ந்தவர் அலெக்ஸ்(வயது36). கூலித்தொழிலாளி. இவருக்கும் பழனி அருகேயுள்ள சரவணப்பட்டியை சேர்ந்த காளிமுத்து மகள் சுகன்யா என்பவருக்கும் திருமணமாகி 5 வருடங்கள் ஆகிறது. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். திருமணத்திற்கு பின் அலெக்ஸ் தனது மனைவி சுகன்யாவுடன் சரவணப்பட்டியில் தங்கி வேலை செய்து வந்தார்.

இந்நிலையில் நேற்று அலெக்ஸ் குடும்ப பிரச்சினை காரணமாக வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி கீரனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள அப்பத்தன்பட்டியை சேர்ந்தவர் பிரேம்குமார் (29). இவரது மனைவி சூர்யா (24). திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு குழந்தை இல்லை. எனவே வீட்டில் அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டது. மேலும் பிரேம்குமார் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி இருந்தார்.

இந்தநிலையில் குழந்தை இல்லாத ஏக்கம் அவரை வாட்டியது. அதையொட்டி அவர் நேற்று வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து இடையகோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஒட்டன்சத்திரம் தும்மிச்சம்பட்டியை சேர்ந்தவர் மணிகண்டன்(27). இவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி வேலைக்கு செல்லாமல் ஊர்சுற்றி வந்தார். இதனால் அவரை தாயார் திட்டியதாக கூறப்படுகிறது. இதில் மனமுடைந்த மணிகண்டன் நேற்று விஷம் குடித்து விட்டு வீட்டின் அருகே மயங்கி கிடந்தார். இதையடுத்து அவர் ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்து போனார். இது குறித்து ஒட்டன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்