எறையூரில் குடிநீர் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்

எறையூரில் குடிநீர் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2019-05-29 23:00 GMT
மங்களமேடு,

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா எறையூரில் கடந்த சில நாட்களாக குடிநீர் வழங்கப்படவில்லையாம். இதுகுறித்து அந்தப்பகுதி பொதுமக்கள் வேப்பந்தட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டுள்ளனர். ஆனால் குடிநீர் வழங்க எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து நேற்று எறையூர்-பெரம்பலூர் சாலையில் உள்ள எறையூர் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு திடீரென்று சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பேச்சுவார்த்தை

இது குறித்து தகவலறிந்த வந்த மங்களமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஈஸ்வரன், எறையூர் ஊராட்சி செயலாளர் ராஜராஜன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என உறுதி அளித்ததின் பேரில், பொதுமககள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் அந்தப்பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

மேலும் செய்திகள்