துறையூர், லால்குடியில் பள்ளி வாகனங்களை அதிகாரிகள் ஆய்வு

துறையூர், லால்குடியில் பள்ளி வாகனங்களை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

Update: 2019-05-30 23:00 GMT
துறையூர்,

துறையூரில் வட்டார மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலக வளாகத்தில் 150 பள்ளி வாகனங்களை முசிறி கோட்டாட்சியர் ரவிச்சந்திரன் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்தனர். லால்குடியில் கோட்டாட்சியர் பாலாஜி, துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜசேகர் ஆகியோர் முன்னிலையில் லால்குடி வட்டார போக்குவரத்து பகுதி மோட்டார் வாகன ஆய்வாளர் சத்தியமூர்த்தி தலைமையிலான குழுவினர் 75 பள்ளி வாகனங்களை ஆய்வு செய்தனர்.இதுபோல் ஸ்ரீரங்கம் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு உட்பட்ட 36 பள்ளி வாகனங்கள், நம்பர் 1 டோல்கேட் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளி மைதானத்தில் வைத்து நேற்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டன. ஸ்ரீரங்கம் வட்டார போக்குவரத்து அலுவலர் (பொறுப்பு) ஜெயதேவராஜ், ஸ்ரீரங்கம் மோட்டார் வாகன ஆய்வாளர் சம்பத்குமார் ஆகியோர் கலந்து கொண்டு ஆய்வு செய்தனர்.

ஆய்வின்போது வாகன ஓட்டுனர் உரிமம், வாகன தகுதி சான்று, அவசர கால வழி, புத்தக பை வைக்கும் இட வசதி, பள்ளி குழந்தைகள் ஏறி இறங்கும் வகையில் உயரம் குறைவான படிக்கட்டுகள், முதலுதவி பெட்டி, தீயணைப்பான் உள்ளிட்டவை உள்ளதா என்று சரி பார்க்கப்பட்டது.

மேலும் 17 வாகனங்களில் தீயணைப்பான், முதலுதவி பெட்டி இல்லாதது கண்டு பிடிக்கப்பட்டு, தகுதி நீக்கம் செய்யப்பட்டன. மேலும் விபத்தில்லாமல் வாகனங்களை இயக்கவும், செல்போன், மது உள்ளிட்டவை பயன்படுத்தக்கூடாது என்பன உள்ளிட்ட போக்குவரத்து விதிகளை கடைபிடிக்கவும், அனைத்து பள்ளி வாகன ஓட்டுனர்களும் தர ஆய்வு குழு முன்னிலையில் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். 

மேலும் செய்திகள்