நெய்வேலியில், இளம்பெண், தூக்குப்போட்டு தற்கொலை - திருமணமான 6 மாதத்தில் விபரீத முடிவு

நெய்வேலியில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை கொண்டார். திருமணமான 6 மாதத்தில் நேர்ந்த இந்த பரிதாப சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

Update: 2019-05-30 22:30 GMT
நெய்வேலி,

நெய்வேலி 31-வது வட்டம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் முத்துக்குமரன் (வயது 31), கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி அஞ்சலைதேவி (27). இவர்களுக்கு திருமணமாகி 6 மாதங்கள் ஆகிறது.

இந்த நிலையில் அஞ்சலைதேவிக்கு கடந்த சில மாதமாக உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது. இதனால் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இருப்பினும் உடல்நிலை சரியாகவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் மனவேதனையில் இருந்த அஞ்சலைதேவி, நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் புடவையால் தூக்குப்போட்டு கொண்டதாக தெரிகிறது. அப்போது அஞ்சலைதேவியின் தாயார் அரசாயி, வீட்டிற்கு வந்தார். அங்கு அஞ்சலைதேவி தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த அவர் சத்தம்போட்டு அலறினார். இந்த சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஒன்று திரண்டனர்.

பின்னர், தூக்கில் தொங்கிய அஞ்சலைதேவியை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதில் அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர், உறவினர்கள் அஞ்சலைதேவியின் உடலை பார்த்து கதறி அழுதனர். இது குறித்து அரசாயி கொடுத்த புகாரின் பேரில் நெய்வேலி தெர்மல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே திருமணமான 6 மாதத்தில் அஞ்சலைதேவி இறந்ததால் அவரது சாவுக்கான காரணம் குறித்து ஆர்.டி.ஓ. விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்