ஆபாச வீடியோவை காண்பித்து, 5 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் - போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது

ஆபாச வீடியோவை காண்பித்து 5 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை போக்சோ சட்டத்தின்கீழ் போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-05-31 22:45 GMT
மலைக்கோட்டை,

திருச்சி சத்திரம் பஸ் நிலையம் பகுதியை சேர்ந்த ஒரு தம்பதியின் 5 வயது மகள், அதே பகுதியில் உள்ள நடன பயிற்சி பள்ளியில் சேர்ந்து நடனம் கற்று வந்தாள். தினமும் மாலை 5 மணி முதல் இரவு 7 மணிவரை நடக்கும் நடன வகுப்பில் அச்சிறுமி பயிற்சி எடுத்து வந்தாள். சிறுமியை அவரது தாய், தந்தையரில் யாராவது ஒருவர் தினமும் நடன பள்ளிக்கு அழைத்து சென்று விட்டு விட்டு, பின்னர் மீண்டும் வீட்டுக்கு அழைத்து வருவது வழக்கம்.

அதே நடன பயிற்சி பள்ளியில் மலைக்கோட்டை இ.பி.ரோட்டை சேர்ந்த ஏழுமலை என்பவரின் மகன் சரவணக்குமார்(19) நடனம் கற்று வந்துள்ளார். சில நேரங்களில் சிறுவர், சிறுமிகளுக்கு சரவணக்குமார் நடனம் கற்று கொடுத்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்தநிலையில் நேற்று முன்தினம் அச்சிறுமியை, அவளது தாயார் நடனப்பள்ளிக்கு அழைத்து சென்று விட்டுள்ளார். 2 மணி நேரம் பயிற்சி வகுப்பு நடக்கும் என்பதால் சிறுமியின் தாயார் அப்பகுதியில் சாலையில் நடைபயிற்சிக்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது. அன்றையதினம் நடன பயிற்சி பள்ளியில் யாரும் இல்லாததால், சரவணக்குமார் அங்கு வந்த சிறுவர்-சிறுமிகளுக்கு நடனம் கற்று கொடுத்ததாக கூறப்படுகிறது.

பயிற்சி வகுப்பு முடிந்து அனைவரும் சென்று விட்ட நிலையில் அச்சிறுமி மட்டும் நடனப்பள்ளியில் தாயாருக்காக காத்திருந்தாள். அப்போது சரவணக்குமார் தனது செல்போனில் ஆபாச வீடியோவை அச்சிறுமிக்கு காண்பித்து, பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

நடன பள்ளியை விட்டு வெளியே வந்த அச்சிறுமி மிகவும் சோர்வாக காணப்பட்டாள். இதனால், பதறிப்போன தாயார் என்னவென்று விசாரித்தபோது சிறுமி நடந்ததை கூறி அழுதாள். இந்த தகவல் அக்கம் பக்கத்தினருக்கும் தெரியவரவே அதிர்ச்சி அடைந்த அவர்கள் நடன பயிற்சி பள்ளிக்கு சென்று அங்கிருந்த சரவணக்குமாரை அடித்து உதைத்து திருச்சி கோட்டை அனைத்து மகளிர் போலீசில் ஒப்படைத்தனர்.

போலீஸ் இன்ஸ்பெக்டர் வசுமதி, சிறுமியை வன்கொடுமை செய்து பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக போக்சோ சட்டத்தின்கீழ் வாலிபர் சரவணக்குமார் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தார். பின்னர், திருச்சி முதலாவது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் அவர் ஆஜர்படுத்தப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். 

மேலும் செய்திகள்