தாய் திட்டியதால் பிளஸ்-1 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை

சிந்தாதிரிப்பேட்டையில், தாய் திட்டியதால் பிளஸ்-1 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

Update: 2019-06-02 22:30 GMT
சென்னை,

சென்னை சிந்தாதிரிப்பேட்டை அய்யா முதலி தெருவை சேர்ந்தவர் லட்சுமணன். தனியார் நிறுவன ஊழியர். இவரது மகள் காயத்ரி (வயது 16). அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். கோடை விடுமுறை என்பதால் வீட்டில் இருந்து விடுமுறையை கழித்து வந்தார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு காயத்ரியின் தாயார் கடைக்கு செல்வதற்காக அவரை அழைத்தார். ஆனால் தாய்-மகள் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த காயத்ரியின் தாயார் அவரை திட்டி விட்டு கடைக்கு சென்றுவிட்டார். வீட்டில் காயத்ரி மட்டுமே தனியாக இருந்ததாக தெரிகிறது.

தற்கொலை

இதற்கிடையே கடையில் இருந்து திரும்பிய அவரது தாயார், காயத்ரியின் அறை வெகு நேரமாகியும் திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்தார். கதவை தட்டிப்பார்த்தும் திறக்காததால், அக்கம்பக்கத்தினர் உதவியோடு கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார்.

அங்கு காயத்ரி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. இதை கண்ட அவரது தாயார் கதறி அழுதார். இது குறித்து அங்கிருந்தவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சிந்தாதிரிப்பேட்டை போலீசார், உடலை மீட்டு ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மாணவி தற்கொலை குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, தாய் திட்டியதால் மனமுடைந்து பிளஸ்-1 மாணவி தற்கொலை செய்துகொண்டாரா? அல்லது வேறு எதுவும் காரணமா? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்