பொன்னேரி அருகே பள்ளி மாணவன் திடீர் சாவு விஷம் கொடுத்து கொலையா? போலீசார் விசாரணை

பொன்னேரி அருகே பள்ளி மாணவன் திடீரென இறந்தான். அவன் விஷம் கொடுத்து கொல்லப்பட்டானா? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2019-06-06 22:00 GMT
பொன்னேரி,

பொன்னேரியை அடுத்த கூடுவாஞ்சேரி ஏழுமலையான் கோவில் தெருவை சேர்ந்தவர் கோபி. ஆட்டோ டிரைவர். இவரது மகன் கவுசிகன் (வயது 8). அதே பகுதியில் உள்ள பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தான்.

நேற்று முன்தினம் இரவு மாணவன் கவுசிகன் சாப்பிட்டு விட்டு வீட்டில் தூங்கினான். நள்ளிரவு திடீரென அவனுக்கு வாந்தி ஏற்பட்டது. சிறிதுநேரத்தில் கவுசிகன் மயங்கி கீழே விழுந்தான்.

இதனால் பதற்றம் அடைந்த பெற்றோர், அவனை பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், வரும் வழியிலேயே சிறுவன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இறப்பதற்கு முன்பாக சிறுவனின் உடல் நிறம் மாறியதாக தெரிகிறது.

எனவே அவன் வெளியில் எங்காவது சென்றபோது சாப்பிட்ட உணவுப்பொருளில் விஷம் கலக்கப்பட்டு கொல்லப்பட்டானா? அல்லது விஷ பூச்சிகள் கடித்ததால் இறந்தானா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பள்ளி மாணவன் திடீரென உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்