பெரம்பலூரில் பயங்கரம்: பிரபல ரவுடி பீர்பாட்டிலால் கழுத்தறுத்து கொலை போலீசார் விசாரணை

பெரம்பலூரில் பிரபல ரவுடி பீர்பாட்டிலால் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டார். இந்த பயங்கர சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2019-06-08 22:15 GMT
பெரம்பலூர்,

பெரம்பலூர் பாலக்கரை ரவுண்டானாவில் இருந்து கலெக்டர் அலுவலகம் செல்லும் சாலையில் சுந்தர்நகர் விரிவாக்க பகுதியில் உள்ள மரத்தடியில் நேற்று காலை 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்தார். இது குறித்து தகவலறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இறந்து கிடந்தவர் பெரம்பலூர் கம்பன் தெருவை சேர்ந்த நாகராஜ்(வயது 50) என்பது தெரியவந்தது. பிரபல ரவுடியான இவர் மீது முன்னாள் பேரூராட்சி தலைவர் செல்வராஜ் கொலை வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது.

மேலும் சம்பவ இடத்திற்கு பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு திஷாமித்தல் வந்து பார்வையிட்டார். இறந்து கிடந்த நாகராஜின் உடல் அருகே பீர்பாட்டில்கள் உடைந்து கிடந்தன. இதனால் முன்விரோதம் காரணமாக யாரோ நாகராஜை அழைத்து வந்து, அவரை மது குடிக்க வைத்து, பின்னர் அவர் போதையில் இருந்தபோது பீர்பாட்டிலால் கழுத்தை அறுத்து கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர். இதற்கிடையே கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தடயங்களை சேகரித்தனர். இதையடுத்து போலீசார் நாகராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து, விசாரணை நடத்தி கொலையாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர். பிரபல ரவுடி கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரம்பலூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்