காஞ்சீபுரத்தில் கல்லூரி மாணவரிடம் செல்போன், பணம் பறிப்பு 2 பேர் கைது

காஞ்சீபுரத்தில் கல்லூரி மாணவரிடம் செல்போன், பணம் பறித்த வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2019-06-08 21:24 GMT
காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் வையாவூர் பாரதி நகரை சேர்ந்தவர் கலைவாணன். இவரது மகன் கவியரசன் (வயது 18). இவர் காஞ்சீபுரத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்த நிலையில், கடந்த 5-ந்தேதி இரவு மாணவர் கவியரசன் தனது மோட்டார்சைக்கிளில் வையாவூர் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது மற்றொரு மோட்டார்சைக்கிளில் வந்த 3 பேர், மாணவர் கவியரசனை வழிமறித்தனர்.

உடனே அவர்கள் 3 பேரும் கத்தி முனையில், மாணவர் கவியரசனை மிரட்டி ஒரு செல்போன், ரூ.2 ஆயிரம் போன்றவற்றை பறித்து கொண்டு, வெளியில் சொன்னால் நடப்பதே வேறு என்று மிரட்டிவிட்டு சென்றுவிட்டனர்.

இதுகுறித்து கல்லூரி மாணவர் கவியரசன் காஞ்சீபுரம் தாலுகா போலீசில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாங்கம் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரித்து வந்தார்.

2 பேர் கைது

இந்த நிலையில், இன்ஸ்பெக்டர் ராஜாங்கம் நேற்று வையாவூர் ஏரிக்கரை அருகே வாகன தணிக்கை செய்து கொண்டிருந்தார். அப்போது ஒரே மோட்டார்சைக்கிளில் 3 பேர் அங்கு வந்தனர். அங்கு வாகன தணிக்கையில் ஈடுபட்ட இன்ஸ்பெக்டர் ராஜாங்கம், சப்-இன்ஸ்பெக்டர்கள் செல்லப்பிள்ளை, ராஜமாணிக்கம் மற்றும் போலீசாரை பார்த்ததும், மிரள மிரள விழித்தனர். சந்தேகம் அடைந்த இன்ஸ்பெக்டர் ராஜாங்கம் அவர்களை பிடிக்க முயன்றார். ஒருவர் தப்பி ஓடி விட்டார். 2 பேரை பிடித்து காஞ்சீபுரம் தாலுகா போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று துருவி துருவி விசாரித்தனர்.

விசாரணையில், அவர்கள் கல்லூரி மாணவர் கவியரசனிடம் கத்திமுனையில் செல்போன்-பணம் பறித்தது தெரியவந்தது. மேலும் அவர்கள் காஞ்சீபுரம் காமராஜர் நகரை சேர்ந்த கல்லூரி மாணவரான பரத் (19), அதே பகுதியை சேர்ந்த லோகேஷ் (20) என்பது தெரியவந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஒரு செல்போன், ரூ.2 ஆயிரம், ஒரு வீச்சரிவாள், ஒரு மோட்டார்சைக்கிள் போன்றவற்றை போலீ சார் பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்