குறைதீர்க்கும் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் கலெக்டர் ஆசியா மரியம் வழங்கினார்

நாமக்கல்லில் நேற்று நடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ஆசியா மரியம் வழங்கினார்.

Update: 2019-06-10 22:45 GMT
நாமக்கல், 

நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று கலெக்டர் ஆசியா மரியம் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, இலவச வீட்டுமனைப்பட்டா, வங்கி கடன் உதவி, குடிசை மாற்று வாரிய வீடு, குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கேட்டு மொத்தம் 449 மனுக்களை பொதுமக்கள் கலெக்டரிடம் வழங்கினர்.

இந்த மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் உரிய அலுவலர்களிடம் வழங்கி, அவற்றின் மீது துரித நடவடிக்கை மேற்கொண்டு தகுதியான நபர்களுக்கு நலத்திட்ட உதவிகளை உடனுக்குடன் வழங்கிட உத்தரவிட்டார்.

பின்னர் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 5 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.20 ஆயிரத்து 900 மதிப்பிலான மோட்டார் பொருத்திய தையல் எந்திரங்களையும், 5 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.17 ஆயிரத்து 300 மதிப்பிலான நவீன மடக்கு குச்சிகள் உள்பட மொத்தம் 13 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.45 ஆயிரத்து 210 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் கலெக்டர் வழங்கினார். அதை தொடர்ந்து அவர், கலெக்டர் அலுவலக தரைதளத்தில் மாற்றுத்திறனாளிகளை நேரில் சந்தித்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.

இக்குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) துரை, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜெகதீசன் உள்பட அனைத்து அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்