மாட்டு வண்டி தொழிலாளர்களுக்காக 2 இடங்களில் மணல் குவாரி திறப்பு

மாட்டு வண்டி தொழிலாளர்களுக்காக 2 இடங்களில் மணல் குவாரி திறக்கப்பட்டுள்ளது.

Update: 2019-06-11 22:45 GMT
திருவெறும்பூர்,

திருவெறும்பூர் பகுதியில் மாட்டு வண்டிகள் மூலம் மணல் அள்ளும் தொழிலாளர்கள் சுமார் 700-க்கும் ேமற்பட்டோர் உள்ளனர். விவசாயம் இல்லாத நாட்களில் மணல் அள்ளும் தொழிலை இவர்கள் செய்து வருகின்றனர். காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் மணல் அள்ளுவதற்கு நீதிமன்றங்கள் தடை விதித்ததால், இவர்களால் மணல் அள்ள முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.

ஆனால் மணல் கடத்தப்படும் சம்பவங்கள் நடந்தன. மணல் கடத்தலை தடுக்க வருவாய்த்துறையினர் மற்றும் போலீசார் நடவடிக்கை எடுத்தனர். இதையடுத்து மணல் கடத்தியவர்கள் கைது செய்யப்பட்டனர்.

வாழ்வாதாரம் பாதிப்பு

இந்நிலையில் மாட்டு வண்டி தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட நிலையில், அவர்கள் மணல் குவாரி திறக்க அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். மேலும் கோரிக்கையை வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களை நடத்தினர்.

இதையடுத்து திருவெறும்பூர் தாலுகா கீழ முல்லக்குடி காவிரி ஆற்று பகுதியிலும், ஸ்ரீரங்கம் தாலுகா திருவானைக்காவல் -கல்லணை செல்லும் சாலை அருகே உள்ள பகுதி என 2 இடங்களிலும் மணல் அள்ள, சில விதிமுறைகளுடன் அரசு அனுமதி அளித்துள்ளது.

மணல் குவாரிகள் திறப்பு

அதில் மாட்டு வண்டி குவாரி அதிகாலை 5 மணி முதல் 7 மணி வரை செயல்படும். மாட்டு வண்டிக்கு கட்டணமாக ரூ.105, மின்னணு கருவி மூலம் வசூலிக்கப்படும். இந்த குவாரிகள் 2 ஆண்டு காலம் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசின் இந்த அறிவிப்பால் மாட்டு வண்டியில் மணல் அள்ளும் தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இதையடுத்து 2 இடங்களிலும் மணல் குவாரி திறக்கப்பட்டு, மாட்டு வண்டி தொழிலாளர்கள் மணல் அள்ளி செல்கின்றனர். 

மேலும் செய்திகள்