சேலத்தில் பள்ளி மாணவிகள் 2 பேர் தற்கொலை முயற்சி
சேலத்தில் பள்ளி மாணவிகள் 2 பேர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றனர்.
சேலம்,
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
சேலம் உடையாப்பட்டி எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த ஒரு மாணவி அங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 வகுப்பு படித்து வருகிறார். இந்தநிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு மாணவி, தனது 10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழை பள்ளியில் இருந்து வாங்கி சென்றதாகவும், ஆனால் அந்த சான்றிதழை அவர் திடீரென தொலைத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த அவர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதுபற்றி அறிந்த உறவினர்கள் மாணவியை மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து அம்மாபேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல், சேலம் கன்னங்குறிச்சி அண்ணாநகரை சேர்ந்த மற்றொரு அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். சரியாக மாணவி படிக்காததால், அவரை பெற்றோர் கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்து காணப்பட்ட மாணவி விஷம் குடித்து வீட்டில் மயங்கி கிடந்தார்.
இதையடுத்து அவரை குடும்பத்தினர் மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக கன்னங்குறிச்சி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.