பிளஸ்–2 தேர்வில் தோல்வி அடைந்த மாணவர் தற்கொலை உயர்கல்வி படிக்க முடியாத ஏக்கத்தில் விபரீதம்

திற்பரப்பு அருகே பிளஸ்–2 தேர்வில் தோல்வி அடைந்த மாணவர் தற்கொலை செய்து கொண்டார். உயர்கல்வி படிக்க முடியாத ஏக்கத்தில் அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

Update: 2019-06-13 22:15 GMT
குலசேகரம்,

குமரி மாவட்டம் திற்பரப்பு அருகே கையாலக்கல் பகுதியை சேர்ந்தவர் முருகேசன், தொழிலாளி. இவருக்கு 3 மகன்கள் உள்ளனர். இளைய மகன் ஆகாஷ் (வயது 17). சமீபத்தில் நடந்த பிளஸ்–2 தேர்வில் இவர் தோல்வி அடைந்தார். இதனால் மனமுடைந்த நிலையில் காணப்பட்டார். அவருக்கு குடும்பத்தினர் ஆறுதல் கூறி வந்தனர். இதற்கிடையே அவர் அந்த பகுதியில் உள்ள ஒரு பால் விற்பனை நிலையத்தில் வேலை பார்த்து வந்தார்.

ஆகாசுடன் படித்த சக மாணவர்கள் உயர்கல்வி படிப்பதற்காக தற்போது ஆர்வத்துடன் விண்ணப்பித்து வந்தனர். இதனை கவனித்த அவர், தேர்வில் தோல்வி அடைந்ததால் மற்றவர்களை போல் உயர்கல்வி படிக்க முடியவில்லையே என்று மற்றவர்களிடம் கூறி தன்னுடைய வேதனையை வெளிப்படுத்தியதாக தெரிகிறது.

அதே சமயத்தில் 10–ம் வகுப்பு மதிப்பெண் மூலம் வேறு ஏதாவது படிப்பு படிக்க முயற்சி மேற்கொண்டுள்ளார். ஆனால் அதற்கு அதிக பணம் தேவைப்படும் என்று சிலர் கூறியுள்ளனர். இதனால் கடந்த சில நாட்களாகவே ஆகாஷ் மிகவும் வேதனையில் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று ஆகாஷ் வீட்டின் அருகில் உள்ள மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். மகன் தூக்கில் தொங்குவதை கண்ட பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர், இதுகுறித்து குலசேகரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேதபரி சோதனைக்காக குலசேகரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்