கபிஸ்தலம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கலெக்டர் ஆய்வு

கபிஸ்தலத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் கலெக்டர் அண்ணாதுரை ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2019-06-15 23:00 GMT
கபிஸ்தலம்,

தஞ்சை மாவட்டம் கபிஸ்தலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்நோயாளிகள் பிரிவிற்கு மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை சென்று ஆய்வு மேற்கொண்டார். அங்கு நோயாளிகளின் வருகைப்பதிவேடு, குடிநீர் வசதி, பரிசோதனை செய்யப்படும் இடம், மருந்து வைக்கும் இடம் ஆகியவற்றை பார்வையிட்ட கலெக்டர், போதுமான அளவு மருந்து கையிருப்பில் உள்ளதா? என டாக்டர்களிடம் கேட்டறிந்தார்.

பின்னர் அவர், வளாகங்களை தூய்மையாக வைத்து கொள்ள வேண்டும் என பணியாளர்களை அறிவுறுத்தினார். பிரசவம் ஆன பெண்களின் உடல்நிலை, குழந்தைகளின் உடல்நிலை பற்றி விசாரித்த கலெக்டர் அண்ணாதுரை அவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறை குறித்தும், அம்மா குழந்தை நல பரிசு பெட்டகம் இதுவரை வழங்கப்பட்டது மற்றும் கையிருப்பில் உள்ள விவரத்தையும் கேட்டறிந்தார்.

ஆய்வின்போது சுகாதார பணிகள் உதவி இயக்குனர் ரவிச்சந்திரன், வட்டார மருத்துவ அலுவலர் நவீன்குமார், நிலைய மருத்துவ அலுவலர் சோபனா, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் பாஸ்கரன் ஆகியோர் உடன் இருந்தனர்.

முன்னதாக தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் மருத்துவ அலுவலர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் நடந்தது. இதற்கு கலெக்டர் அண்ணாதுரை தலைமை தாங்கி பேசும்போது, அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் கர்ப்பிணிகள் ஆரோக்கியமாக குழந்தை பெறுவதற்கான அனைத்து சிகிச்சைகளையும் வழங்க வேண்டும். பணி நேரத்தில் டாக்டர்கள் மருத்துவமனையில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றார். கூட்டத்தில் சுகாதார பணிகள் துணை இயக்குனர் ரவீந்திரன் மற்றும் அரசு டாக்டர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்