மணப்பாறை அருகே வீட்டை வாடகைக்கு எடுத்து போலி மதுபானம் தயாரிப்பு 4 பேர் கைது

மணப்பாறை அருகே வீட்டை வாடகைக்கு எடுத்து போலி மதுபானம் தயாரித்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-06-15 23:00 GMT
மணப்பாறை,

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த நல்லாம்பிள்ளை ஊராட்சிக்குட்பட்ட வெள்ளிவாடியில் ஒரு வீட்டில் போலி மதுபான ஆலை செயல்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் மணப்பாறை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமலிங்கம் தலைமையிலான போலீசார் நேற்று காலை அந்த வீட்டுக்கு சென்று அதிரடி சோதனை நடத்தினார்கள். அப்போது, அந்த வீட்டில் 3 பேர் போலி மதுபானங்களை தயாரித்துக்கொண்டிருந்தனர்.

உடனே போலீசார் 3 பேரையும் பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில், அவர்கள் புதுக்கோட்டை மாவட்டம் சூரக்காட்டைச் சேர்ந்த செல்வராஜ் (வயது 43), அறிவழகன்(40), அண்ணாமலை (28) என்பது தெரியவந்தது. மேலும் அவர்கள் புளி விற்பனை செய்வதாக கூறி, வீட்டை வாடகைக்கு எடுத்து, இரவு நேரத்தில் போலி மதுபானம் தயாரித்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து ஒரு மூட்டையில் இருந்த காலி பாட்டில்கள், 16 போலி மதுபாட்டில்கள், எரிசாராயம் கொண்டு வந்த காலி கேன்கள் மற்றும் பேரல்கள் உள்ளிட்ட பொருட் களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, செல்வராஜ், அறிவழகன், அண்ணாமலை மற்றும் வீட்டின் உரிமையாளர் விடத்திலாம்பட்டியை சேர்ந்த மருதை ஆகியோரை கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய சிலரை போலீசார் தேடி வருகிறார்கள்.

இந்த சம்பவம் தொடர்பாக மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையின் முடிவில் தான் போலியாக மது தயாரித்து எந்தெந்த பகுதிகளில் விற்பனை நடைபெற்றது? எத்தனை ஆண்டு இந்த விற்பனை நடைபெறுகின்றது? இதில் யார்? யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்ற விவரம் முழுமையாக தெரியவரும். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்