7-வது ஊதியக்குழு பரிந்துரையின்படி ஊதியம் வழங்கக்கோரி உள்ளாட்சித்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

7-வது ஊதியக்குழு பரிந்துரையின்படி ஊதியம் வழங்கக்கோரி உள்ளாட்சித்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2019-06-17 23:00 GMT
திருவாரூர்,

கிராம ஊராட்சிகளில் பணியாற்றும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குனர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு 7-வது ஊதியக்குழு பரிந்துரையின்படி ஊதியம் வழங்க வேண்டும். ஊதியக்குழு நிலுவை தொகையை உடனடியாக வழங்க வேண்டும். 2000-ம் ஆண்டுக்கு முன்னர் பணியில் சேர்ந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குனர்களுக்கு ரூ.4,400 மாத ஊதியம் வழங்க வேண்டும்.

2010-ம் ஆண்டு முதல் பணிபுரியும் துப்பரவு பணியாளர்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளாட்சித்துறை ஊழியர்கள் நேற்று திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்துக்கு சி.ஐ.டி.யூ. ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் கோவிந்தராஜ் தலைமை தாங்கினார். மாநில தலைவர் பாலசுப்பிரமணியன், சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் முருகையன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

இதில் சி.ஐ.டி.யூ. மாவட்ட பொருளாளர் பாண்டியன், சங்கத்தின் மாவட்ட செயலாளர் முனியாண்டி, நுகர் பொருள் வாணிபக்கழக ஊழியர் சங்க மண்டல செயலாளர் மோகன் உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். 

மேலும் செய்திகள்