மறைமலைநகர் அருகே பெட்ரோல் குண்டு வீசிய ரவுடி கும்பல்; கார் எரிந்து நாசம்

மறைமலைநகர் அருகே வீடுகளை சூறையாடி பெட்ரோல் குண்டுவீசிய ரவுடி கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். இதில் கார் எரிந்து நாசமானது.

Update: 2019-06-18 00:00 GMT

வண்டலூர்,

காஞ்சீபுரம் மாவட்டம் மறைமலைநகர் அருகே கீழக்கரணை வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் வசிப்பவர் பாபு (வயது22). பிரபல கார் தொழிற்சாலையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்றுமுன்தினம் இரவு வீட்டு வாசலில் நின்று செல்போனில் பேசிக்கொண்டு இருந்தார். அப்போது 2 மோட்டார் சைக்கிள்களில் 6 பேர் கொண்ட கும்பல் அங்கு வந்து பாபுவை தாக்கியது.

பின்னர் அவரிடம் இருந்து செல்போன் மற்றும் அவர் கழுத்தில் அணிந்து இருந்த 3 பவுன் தங்கச்சங்கிலியை அந்த கும்பல் பறிக்க முயன்றது. அப்போது பாபு கூச்சலிட்டதால் அக்கம்பக்கத்தினர் வந்தனர். உடனே அந்த கும்பல் செல்போன், சங்கிலியை பறித்து கொண்டு தப்பியது.

சிறிதுநேரம் கழித்து 10 பேர் அடங்கிய கும்பல் மீண்டும் அங்கு வந்து பாபுவின் வீட்டுக்குள் புகுந்தது. அங்கு பாபுவை தாக்கி வீட்டில் இருந்த பொருட்களை அடித்து உடைத்து சூறையாடியது.

பாபு வீட்டின் அருகில் உள்ள வீட்டில் நம்பிராஜன், வடிவேல் உள்பட 6 பேர் தங்கியுள்ளனர். இவர்களும் தனியார் கார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகின்றனர். அவர்களின் வீட்டிற்குள்ளும் புகுந்த அந்த கும்பல் அவர்களை தாக்கி அவர்களிடம் இருந்த செல்போன், 5 பவுன் தங்கநகை, மடிக்கணினி ஆகியவற்றை பறித்து கொண்டது.

பின்னர் வீட்டின் வெளியே நிறுத்தி இருந்த கார் மீது அந்த கும்பல் பெட்ரோல் குண்டு வீசியது. இதில் அந்த கார் எரிந்து நாசமானது. இதேபோல் பக்கத்து வீட்டில் இருந்த 2 காரையும் அந்த ரவுடி கும்பல் சேதப்படுத்தியது. சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வந்தனர்.

அவர்கள் மீது கற்களை வீசிய மர்மகும்பல் தப்பி ஓடி விட்டது. இந்த தாக்குதலில் காயம் அடைந்த பாபு, சுமன் ஆகியோர் பொத்தேரியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுகுறித்து மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து 10 பேர் கொண்ட கும்பலை தேடி வருகின்றனர்.

பாபுவின் வீட்டின் அருகில் காலி இடம் உள்ளது. இதில் சில ரவுடிகள் அமர்ந்து மது குடித்து வந்ததாகவும், கஞ்சா பயன்படுத்தி வந்ததும் தெரியவந்தது. இதுகுறித்து போலீசாருக்கு சிலர் தகவல் கொடுத்ததாக தெரிகிறது. இதில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக வீட்டை சூறையாடி ரவுடி கும்பல் பெட்ரோல் குண்டு வீசியதா? அல்லது வேறு ஏதாவது காரணமாக இருக்குமா? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்