உளுந்தூர்பேட்டை, ரிஷிவந்தியத்தில், மின்சாரம் தாக்கி பெண் உள்பட 2 பேர் பலி

உளுந்தூர்பேட்டை, ரிஷிவந்தியத்தில் மின்சாரம் தாக்கியதில் பெண் உள்பட 2 பேர் பலியாகினர்.

Update: 2019-06-20 22:30 GMT
ரிஷிவந்தியம், 

விழுப்புரம் மாவட்டம் ரிஷிவந்தியம் அருகே உள்ள பெரியகொள்ளியூர் கிராமத்தை சேர்ந்தவர் மூர்த்தி. இவருடைய மகன் அய்யப்பன்(வயது 22). இவர் அலங்கார மின்விளக்கு அமைக்கும் தொழில் செய்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று காலையில் அதே பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் அலங்கார மின் விளக்குகள் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது அருகே சென்ற உயரழுத்த மின்கம்பி ஒன்று அய்யப்பன் மீது உரசியதாக தெரிகிறது. இதில் மின்சாரம் தாக்கியதில் அவர் தூக்கி வீசப்பட்டார். பலத்த காயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சங்கராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அய்யப்பன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து மூர்த்தி பகண்டை கூட்டுரோடு போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

உளுந்தூர்பேட்டை கீரனூர் காலனியை சேர்ந்தவர் மொன்னையன் மனைவி நதியம்மாள்(55). இவர் அதே பகுதியில் வீட்டு வேலைகளை செய்யும் பணியில் ஈடுபட்டு வந்தார். இந்த நிலையில் நதியம்மாள், நேற்று காலையில் அதே பகுதியில் உள்ள வீட்டில் கிரைண்டரில் மாவு அரைத்துக்கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக நதியம்மாள் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுபற்றி தகவல் அறிந்த உளுந்தூர்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பலியான நதியம்மாளின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்