குடிபோதையில் தாயாருடன் தகராறு செய்ததால் ஆத்திரம்; அம்மி கல்லை தலையில் போட்டு வாலிபர் படுகொலை, தொழிலாளி கைது

குடிபோதையில் தாயாருடன் தகராறு செய்த வாலிபர் படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அவரது தம்பி கைது செய்யப்பட்டார்.

Update: 2019-06-22 23:30 GMT
வில்லியனூர்,

வில்லியனூர் கோபாலன் கடை பகுதியை சேர்ந்தவர் பாபு. இவரது மனைவி சுமதி. இவர்களது மகன்கள் அருள்ராஜ் (வயது21), ஆனந்த்ராஜ்(21). இரட்டையர்கள். அருள்ராஜ் பெயிண்டர் வேலையும், ஆனந்த்ராஜ் கூலி வேலையும் செய்து வந்தனர். இருவருக்கும் குடிப் பழக்கம் இருந்து வந்ததாக தெரிகிறது. நேற்று முன்தினம் இரவு அண்ணன்-தம்பி இருவரும் அமர்ந்து மது அருந்திக் கொண்டு இருந்தனர்.

போதை தலைக்கேறிய நிலையில் வீட்டுக்கு வந்த அருள்ராஜ் தனது தாயாரிடம் தகராறு செய்துள்ளார். மேலும், தனது மற்றொரு அண்ணன் மனைவியை தவறாக பேசினார். இதை ஆனந்த்ராஜ் தட்டிக் கேட்கவே இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். பின்னர் ஆனந்த்ராஜ் வீட்டை விட்டு வெளியே வந்தார்.

அருகில் இருந்த மதுக்கடைக்கு சென்றவர் அங்கு மேலும் மது குடித்து விட்டு வீட்டுக்கு திரும்பினார். அங்கு தூங்கி கொண்டு இருந்த அருள்ராஜை பார்த்ததும் ஆத்திரம் அடைந்தார். அண்ணன் என்றும் பாராமல் அருகில் கிடந்த அம்மிக்கல்லை எடுத்து அவரது தலையில் போட்டார். இதில் பலத்த காயமடைந்த அருள்ராஜ் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடி துடித்து இறந்து போனார்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த வில்லியனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனிவேலு, சப்-இன்ஸ்பெக்டர் நந்தகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். போலீஸ் சூப்பிரண்டு ரங்கநாதனும் சம்பவ இடத்தை பார்வையிட்டார். பின்னர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்.

இந்தநிலையில் தப்பி ஓடிய ஆனந்த்ராஜை நேற்று காலை போலீசார் கைது செய்தனர்.

தாயாருடன் தகராறு செய்த அண்ணனை தலையில் அம்மிக்கல்லை போட்டு தம்பியே கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்