பொள்ளாச்சி பாலியல் வழக்கில், கைதான 5 வாலிபர்கள் சேலம் சிறைக்கு மாற்றம் - பாதுகாப்பு காரணங்களுக்காக நடவடிக்கை

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதான 5 வாலிபர்களும் பாதுகாப்பு காரணங்களுக்காக சேலம் சிறைக்கு மாற்றப்பட்டனர்.

Update: 2019-06-22 23:00 GMT
சேலம், 

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் ஏராளமான பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் வசந்தகுமார் (வயது 27), திருநாவுக்கரசு (25), சபரிராஜன் (25), மணிவண்ணன் (28), சதீஷ்(28) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கை ஆரம்பத்தில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தினர். இதற்கிடையில் இந்த வழக்கில் அரசியல்வாதிகளுக்கும் தொடர்பு இருப்பதாகபுகார் கூறப்பட்டது. இதனால் இந்த வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கைதானவர்களில் மணிவண்ணனை தவிர மற்ற 4 பேரையும் போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்து நடவடிக்கை எடுத்தனர்.

இந்த நிலையில் கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர்கள் மீது சில கைதிகள் தாக்குதல் நடத்தலாம் என்ற தகவல் வெளியானது. இதனால் பாதுகாப்பு காரணங்களுக்காக திருநாவுக்கரசு, சபரிராஜன், மணிவண்ணன், சதீஷ், வசந்தகுமார் ஆகிய 5 பேரையும் சேலம் சிறைக்கு மாற்றி சிறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். இதையடுத்து அவர்கள் 5 பேரும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டு நேற்று சேலம் மத்திய சிறையில்அடைக்கப்பட்டனர்.

மேலும் செய்திகள்