அரூர் அருகே குடும்ப தகராறில் கடப்பாரையால் தாக்கி விவசாயி கொலை - மனைவி கைது

அரூர் அருகே, குடும்ப தகராறில் கடப்பாரையால் தாக்கி விவசாயியை கொன்ற மனைவியை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-06-22 22:53 GMT
அரூர்,

குடும்ப தகராறில் கடப்பாரையால் தாக்கி விவசாயியை கொன்ற, இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள எம்.தாதம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி வெங்கடேசன் (வயது 40). இவருடைய மனைவி வளர்மதி (38). இவர்களுக்கு 2 மகன்களும், 2 மகள்களும் உள்ளனர். வெங்கடேசன் விவசாயம் செய்து வந்தார். இந்த நிலையில் வெங்கடேசனுக்கு அந்த பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டதாகவும், இதனால் குடும்பத்தை சரியாக கவனிக்காமல் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு குடிபோதையில் இருந்த வெங்கடேசன் வீட்டில் மனைவி வளர்மதியுடன் தகராறில் ஈடுபட்டு உள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த வளர்மதி வீட்டில் இருந்த கடப்பாரையால் வெங்கடேசனை சரமாரியாக தாக்கினார். இதில் படுகாயமடைந்த வெங்கடேசன் பரிதாபமாக உயிரிழந்தார்.

சம்பவம் குறித்து அறிந்து அதிர்ச்சி அடைந்த அக்கம், பக்கத்தினர் இதுபற்றி அரூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், வெங்கடேசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக வளர்மதியிடம் விசாரணை நடத்தினார்கள். அப்போது குடிக்க பணம் கேட்டு தொடர்ந்து தகராறு செய்ததால் ஏற்பட்ட கோபம் காரணமாகவும், குடும்ப தகராறு காரணமாகவும் கணவரை கடப்பாரையால் வளர்மதி தாக்கியது உறுதியானது. இதுதொடர்பாக கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து வளர்மதி போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

இந்த சம்பவம் அரூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்