அருவிகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பால் சீசன் களைகட்டியது: குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்

அருவிகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளதால் குற்றாலத்தில் சீசன் களைகட்டியது. இதனால் அங்கு சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

Update: 2019-06-24 23:00 GMT
தென்காசி,

நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் ஜூன், ஜூலை, ஆகஸ்டு ஆகிய 3 மாதங்கள் சீசன் காலங்களாகும். இந்த சீசன் காலத்தில் விழும் தண்ணீரானது மூலிகை மகத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இதனால் இந்த தண்ணீரில் குளிப்பதற்காக தமிழகம் மட்டுமல்லால் பிற மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள். இந்த ஆண்டு கடந்த 10-ந் தேதி சீசன் தொடங்கியது. தொடங்கிய 2 நாட்கள் மட்டுமே அருவிகளில் தண்ணீர் விழுந்தது. பின்னர் சாரல் மழை இல்லாமல் சீசன் மந்தமாகவே காணப்பட்டது. இதனால் அங்குள்ள கடை வியாபாரிகளும் உற்சாகமின்றி காணப்பட்டனர்.

இந்தநிலையில் கடந்த 2 நாட்களாக குற்றாலம் பகுதியில் சாரல் மழை விட்டுவிட்டு பெய்து வருகிறது. நேற்று காலையில் இருந்தே சாரல் மழை தூறிக் கொண்டு இருந்தது. இடையிடையே வெயிலும் அடித்தது. குளிர்ந்த காற்று வீசியது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியிலும் மழை பெய்ததால் மெயின் அருவி, ஐந்தருவிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது.

நேற்று மதியம் மெயின் அருவியில் பாதுகாப்பு வளைவின் மீது தண்ணீர் விழுந்தது. இதனால் அருவியின் மையப்பகுதிக்கு சென்று குளிக்க போலீசார் அனுமதி மறுத்ததால், ஓரமாக நின்று சுற்றுலா பயணிகள் குளித்தனர்.

மாலை 5.30 மணி அளவில் பழைய குற்றாலம் அருவியிலும் தண்ணீர் கொட்டியது. அருவிகளில் தண்ணீர் வருவதை அறிந்ததும் சுற்றுலா பயணிகள், குற்றாலத்தில் குவிந்தனர். இதன் காரணமாக குற்றாலத்தில் சீசன் களைகட்டி வருகிறது.

குற்றாலம் அருவிகளில் குளிக்கும்போது சோப்பு, ஷாம்பு பயன்படுத்தக்கூடாது என ஏற்கனவே நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. இதனை மாவட்ட நிர்வாகம் மற்றும் குற்றாலம் நகரப்பஞ்சாயத்து நிர்வாகம் அமல்படுத்தி வருகிறது. இதற்காக அருவிக்கரைகளில் நகரப்பஞ்சாயத்து சார்பில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.

அதில், அருவியில் குளிக்கும்போது சோப்பு மற்றும் ஷாம்பு பயன்படுத்தினால் அவர்களுக்கு 100 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும், அருவிக்கரை பகுதிகளில் உள்ள கடைகளில் சோப்பு, ஷாம்பு விற்பனை செய்தால் வியாபாரிகளுக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அருவிகளில் குளிப்பவர்களை நகரப்பஞ்சாயத்து ஊழியர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்