மோட்டார் சைக்கிள் சக்கரத்தில் நாய் சிக்கியதில் கீழே விழுந்த வாலிபர் சாவு தந்தை படுகாயம்

குளித்தலை அருகே மோட்டார் சைக்கிளின் சக்கரத்தில் நாய் சிக்கியதில் கீழே விழுந்த வாலிபர் பரிதாபமாக இறந்தார். அவருடைய தந்தை படுகாயம் அடைந்தார்.

Update: 2019-06-25 23:00 GMT
குளித்தலை,

கரூர் மாவட்டம் குளித்தலை அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் முகமதுயூசுப் (வயது 51). இவர் கரூரில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் வேலை செய்து வருகிறார். இவருடைய மகன் சதாம்உசேன் (24). வெளிநாட்டில் டிரைவராக வேலை பார்த்து வந்த இவர், சொந்த ஊருக்கு வந்திருந்தார்.

இந்நிலையில் நேற்று காலை தோகைமலை அருகே மூட்டக்காம்பட்டியில் உள்ள உறவினர்களை பார்ப்பதற்காக முகமதுயூசுப், சதாம்உசேனுடன் ஒரு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். குளித்தலை - மணப்பாறை சாலையில் தேசியமங்கலம் பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி அருகே சென்றபோது, சாலையோரம் நின்ற நாய் திடீரென சாலையின் குறுக்கே ஓடியது. இதில் நாய், மோட்டார் சைக்கிளின் சக்கரத்தில் சிக்கி செத்தது.

மேலும் நிலைதடுமாறி மோட்டார் சைக்கிளுடன் கீழே விழுந்த முகமதுயூசுப், சதாம்உசேன் ஆகியோர் பலத்த காயமடைந்தனர். அவர்களை அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக குளித்தலை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதில் சிகிச்சை பலனின்றி சதாம்உசேன் பரிதாபமாக உயிரிழந்தார். முகமதுயூசுப் மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து குளித்தலை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்