தொடர்ந்து வீசி வரும் பலத்த காற்று: ராமேசுவரம், பாம்பனில் ஒருவாரமாக மீன்பிடி தொழில் முடங்கியது, தனுஷ்கோடி சாலையை மணல் மூடியது

ராமேசுவரம், பாம்பன் பகுதிகளில் தொடர்ந்து வீசி வரும் பலத்த காற்றால் ஒருவாரமாக மீன்பிடி தொழில் முடங்கியது. தனுஷ்கோடியில் பல இடங்களில் சாலையை மணல் மூடியதால், அதனை அகற்றும் பணி நடக்கிறது.

Update: 2019-07-08 00:15 GMT
ராமேசுவரம்,

ராமேசுவரம் தீவு பகுதியில் கடந்த 1 வாரமாகவே வழக்கத்திற்கு மாறாக பலத்த காற்று வீசி வருவதுடன் கடல் கொந்தளிப்பாகவே காணப்பட்டு வருகின்றது. இதேபோல் விடுமுறை தினமான நேற்றும் பலத்த சூறாவளி காற்று வீசியதுடன், கடல் கொந்தளிப்பாகவே இருந்தது. காற்று, கடல் கொந்தளிப்பு காரணமாக ராமேசுவரம், பாம்பன் பகுதிகளில் நேற்று 7-வது நாளாக மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் 800-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும், ஏராளமான நாட்டு படகுகளும் மீன்பிடிக்க செல்லாமல் கரையோரம் உள்ள கடல் பகுதியில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. ஒருவாரமாகவே மீன்பிடி தொழில் முடங்கியதால், ஏராளமான மீனவர்கள் வருமானம் இன்றி தவிப்பிற்கு ஆளாகியுள்ளனர். மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாததால் பல கோடி ரூபாய் வர்த்தகமும் பாதிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று தனுஷ்கோடி பகுதியிலும் தொடர்ந்து வீசி வரும் பலத்த சூறாவளி காற்றால் எம்.ஆர்.சத்திரம் பகுதியில் இருந்து கம்பிப்பாடு மற்றும் அரிச்சல்முனை வரையிலும் பல இடங்களில் சாலையை மணல் மூடியுள்ளது. இதனால் மணலில் சிக்கி தவித்தபடியே ஆட்டோ உள்ளிட்ட சுற்றுலா வாகனங்கள் சென்று வருகின்றன.

சாலைகளை மூடியுள்ள மணலானது தேசிய நெடுஞ்சாலை துறையின் மூலம் ஜே.சி.பி. எந்திரம் மூலம் அகற்றும் பணி நேற்று முதல் தொடங்கி தீவிரமாக நடைபெற்று வருகின்றது. எம்.ஆர்.சத்திரம் கடற்கரையில் உள்ள துறைமுகத்தை தாண்டி பல அடி உயரத்திற்கு ஆக்ரோஷமாக கடல் அலைகள் சிறி எழுந்து வருகின்றன.

முன்னதாக பாதுகாப்பு கருதி எம்.ஆர்.சத்திரம் கடற்கரையில் உள்ள மீன்பிடி துறைமுக தளத்திற்குள் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் நேற்று விடுமுறை தினம் என்பதால் அங்கு வந்த சுற்றுலா பயணிகள் தடையை மீறி துறைமுக தளத்திற்குள் சென்று பல அடி உயரத்திற்கு ஆக்ரோஷமாக சீறி எழுந்த கடல் அலைகளை வேடிக்கை பார்த்ததுடன், செல்பி எடுத்து கொண்டிருந்தனர். இதை பார்த்த கடலோர போலீசார், துறைமுக பகுதிக்குள் தடையை மீறி நுழைந்த சுற்றுலா பயணிகளை எச்சரித்து அங்கிருந்து வெளியேற்றினர்.

மேலும் செய்திகள்